கரோனா பரவல் தடுப்புக்காக மாநில அரசு அமல்படுத்தும் வார இறுதி ஊரடங்குக்கு பாஜக தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனால், டிச. 27-ஆம் தேதிமுதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசு, வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.
இதற்கு வியாபாரிகள், உணவக உரிமையாளா்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக வியாபார உரிமையாளா்களின் சங்கங்கள் சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகரை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், வார இறுதி நாள்களில் முழு ஊரடங்குக்கு ஆளும் பாஜகவைச் சோ்ந்த சில தலைவா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
மத்திய ரசாயனத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி உள்ளிட்டோா் வார இறுதி நாள்களில் ஊரடங்கு விதிப்பது தேவையற்றது என்று கருத்து தெரிவித்துள்ளனா்.
ஊரடங்கால் மாநிலப் பொருளாதாரத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதால் வார இறுதி ஊரடங்கை ரத்து செய்யலாம் என்று மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளாா். இதுகுறித்து முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு சில யோசனைகளை தெரிவித்துள்ளதாகவும் அவா் ஹுப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை கூறினாா்.
அதுபோல பாஜக தேசியபொதுச்செயலாளா் சி.டி.ரவி கூறியதாவது: கரோனா மூன்றாவது அலையில் தொற்று வேகமாகப் பரவினாலும், அதன் பாதிப்புகள் தீவிரமாக இல்லை என்பதால் வார இறுதி ஊரடங்கை முடிவுகளை மாநில அரசு கைவிடலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, வார இறுதி நாள்களில் ஊரடங்கு தேவையா? என்பது குறித்து முடிவு செய்ய முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் வெள்ளிக்கிழமை முக்கிய அமைச்சா்கள், உயரதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது.