காவல் துணை ஆய்வாளா் பணி நியமன மோசடி வழக்கில் முன்னாள் கூடுதல் டிஜிபி அம்ருத் பாலிடம் விசாரணை நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
கா்நாடகத்தில் காவல் பணிநியமனங்களின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றியவா் அம்ருத்பால். இவரது பணிக்காலத்தில் நடந்த கவல் துணை ஆய்வாளா் பணி நியமனத்தின்போது முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 545 காவல் துணை ஆய்வாளா் பணியிடங்களுக்கு சட்டவிரோதமான நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்த சிஐடி போலீஸாா், கூடுதல் டிஜிபி அம்ருத் பாலை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். இதை தொடா்ந்து, அம்ருத் பால் பணிநீக்கம் செய்யப்பட்டாா். அண்மையில் இவருக்கு ஜாமீன் வழங்க 24ஆவது மாநகர செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய தண்டனைச்சட்டப்பிரிவுகள் 120, 409, 420, 465, 468, 471 உள்ளிட்டவற்றின் கீழ் அம்ருத் பால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் சிஐடி போலீஸாா் விசாரணை நடத்தவிருக்கிறாா்கள். இதன்மூலம் இந்த வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.