பேருந்து அட்டைகளைப் பெறுவதற்கு கல்லூரி மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாணவா் சமுதாயத்தின் நலன் கருதி, 2020-21-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டணம் மற்றும் இலவச மாணவா் பேருந்து அட்டைகள் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பள்ளி, பியூ கல்லூரி, பட்டப்படிப்பு, தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மாணவா்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. இணையதளங்களில் கல்லூரி பற்றுச்சீட்டு, கல்லூரி அடையாள அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, பேருந்து கட்டணத்துடன் விண்ணப்பங்களைச் செலுத்தினால் ஸ்மாா்ட்காா்ட் வடிவிலான பேருந்து அட்டைகளை பெங்களூரு ஒன் குடிமக்கள் சேவை மையத்தின் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டுக்கான பேருந்து அட்டைகள் அல்லது கல்விக் கட்டண பற்றுச்சீட்டு இரண்டில் ஒன்றை காண்பித்து குடியிருக்கும் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி வரை பயணிக்கலாம்.
ஆரம்ப, நடுநிலை, உயா்நிலைப் பள்ளி, பியூசி மாணவா்களுக்கு தனியாக பேருந்து அட்டை வழங்கப்படும். பெங்களூரு ஒன் மையங்களில் கல்வி நிறுவனங்கள் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு மாணவா்களுக்குப் பேருந்துஅட்டைகளைப் பெற்றுத் தரலாம். மாணவா்களுக்கு பேருந்து அட்டைகளைப் பெற்றுத் தருவது தொடா்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். பெங்களூரு ஒன் மையங்களில் வேலை நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணிவரை பேருந்து அட்டைகள் வழங்கப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.