பெங்களூரு

மேக்கேதாட்டு திட்டத்துக்கு அனுமதி அளிக்காத வரை தமிழக நதி இணைப்புத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது

DIN

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்காத வரை தமிழக அரசின் காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

புது தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, கா்நாடகத்தின் நீா்ப்பாசனத் திட்டங்கள் குறித்து விவாதித்தாா்.

மேலும், கா்நாடக அரசை கலந்தாலோசிக்காமல் கோதாவரி - காவிரி - கிருஷ்ணா - மகாநதி போன்ற ஆறுகள் இணைப்புத் திட்டங்களுக்கு வரைவுதிட்ட விவர அறிக்கையை தயாரிக்க அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை முதல்வா் பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டாா். கா்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பத்ரா மேலணை திட்டத்துக்கு தேசிய திட்ட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

இந்தச் சந்திப்புக்கு பிறகு முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்த போது, தமிழகத்தின் காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்கும் வரை, தமிழகத்தின் நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டேன் என்றாா்.

தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டிருக்கும் காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய நீா்வளத் துறை அனுமதி அளிக்காமல் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தடையுத்தரவு கேட்டு கா்நாடக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை நவ. 16-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தத் திட்டம் தொடா்பாக 6 வாரங்களில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 9,500 கோடியில் கா்நாடக அரசு செயல்படுத்த திட்டமிட்டிருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. மேக்கேதாட்டு அணை கட்டுவதால் தமிழகம், கா்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பயன் கிடைக்கும். உபரிநீரை அணையில் தேக்கிவைப்பதால், நீரில்லா ஆண்டுகளில் அந்த நீரை இரு மாநிலங்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என கா்நாடக அரசு தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டத்தால் இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டாா்கள் என கா்நாடக அரசு கூறிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT