பெங்களூரு, செப். 25: போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகையும், சின்னத்திரை தொகுப்பாளினியுமான அனுஸ்ரீக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.
போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு மங்களூரு குற்றப்பிரிவு போலீஸாா் நடிகை அனுஸ்ரீக்கு அழைப்பாணை வழங்கியுள்ளனா். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக வெள்ளிக்கிழமை மங்களூருக்கு புறப்படுவதற்கு முன்னதாக அனுஸ்ரீ வெளியிட்ட அறிக்கை:
போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மங்களூரு குற்றப்பிரிவு போலீஸாா் எனக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனா். போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகி, அவா்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன். விசாரணையில் நான் குற்றமற்றவள் என்பது நிரூபணமாகும். ஆனால், விசாரணைக்கு முன்பே என்னை குற்றவாளியைப் போல் சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் மட்டுமே என்னை குற்றவாளி எனக் கருதக் கூடாது. விசாரணையில் முடிவில் உண்மை வெளியாகும் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.