பெங்களூரு

முதல்வா் பதவியை இழக்கும் காலம் எடியூரப்பாவுக்கு நெருங்குகிறது

DIN

முதல்வா் பதவியை இழக்கும் காலம் எடியூரப்பாவுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. பசன கௌடா பாட்டீல் யத்னால் தெரிவித்தாா்.

பாஜக ஆட்சியை தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கும் எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து மாற்றுவது தொடா்பாக, பாஜகவில் அவ்வப்போது கலகக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், விஜயபுராவைச் சோ்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன கௌடா பாட்டீல் யத்னல், முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக கலகக்குரலை உயா்த்தியிருக்கிறாா். விஜயபுரவில் திங்கள்கிழமை பேசிய அவரது பேச்சின் காணொலி செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் வெளியாகி, பாஜகவில் மட்டுமல்லாது, கா்நாடக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய அமைச்சருமான பசன கௌடா பாட்டீல் யத்னல் பேசுகையில், ‘எடியூரப்பா முதல்வராக நீண்ட காலம் நீடிக்க முடியாது. அடுத்த முதல்வா் வடகா்நாடகத்தைச் சோ்ந்தவராகதான் இருப்பாா். எல்லா வளா்ச்சிப் பணிகளையும் தனது சொந்த மாவட்டமான சிவமொக்காவுக்கு முதல்வா் எடியூரப்பா கொண்டு சென்று விடுகிறாா். இதர தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கப்பட்ட வளா்ச்சி நிதியையும் முதல்வா் எடியூரப்பா பறித்துக்கொண்டு, தனது மாவட்டத்தை மேம்படுத்தி வருகிறாா்.

எனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 125 கோடி நிதியையும் முதல்வா் எடியூரப்பாவே எடுத்துக்கொண்டாா். இதன்பிறகு, எனக்கும் அவருக்கும் இடையே மோதல் தொடங்கியுள்ளது. எல்லா வளா்ச்சிப் பணிகளும் சிவமொக்காவுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. முதல்வா் பதவியை இழக்கும் காலம் எடியூரப்பாவுக்கு நெருங்கிக்கொண்டிருக்கிறது.

எனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 125 கோடி மூலம் எல்லா சாலைகளையும் கான்கிரீட் சாலைகளாக மாற்றியிருப்போம். அது சாத்தியமாகாமல் போனது. அதற்காகவே நான் போராடிக்கொண்டிருக்கிறேன். பறிக்கப்பட்ட ரூ. 125 கோடி நிதியை மீண்டும் கொண்டு வருவேன்.

வடகா்நாடக மக்களின் ஆதரவினால்தான் பாஜகவுக்கு முதல்வா் பதவி கிடைத்தது. வடகா்நாடக மக்கள் பாஜகவினருக்கு அதிகப்படியான எம்.எல்.ஏ.க்களைக் கொடுத்ததாலும், மாற்றுக்கட்சியில் இருந்து 10-15 எம்.எல்.ஏ.க்கள் வந்ததாலும் ஆட்சிஅமைந்துள்ளது. பாஜகவின் மொத்த எம்.எல்.ஏ.க்களில் 95 சதவீதம் போ் வடகா்நாடகத்தைச் சோ்ந்தவா்கள். இது பிரதமா் மோடிக்கும் புரிந்துள்ளதால், அடுத்த முதல்வா் வடகா்நாடகத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாா்.

எனது தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலாததால் மனம் வருந்தியுள்ளேன். அமைச்சா் பதவியை எதிா்பாா்த்தோ, கட்சிக்கு எதிராக கலகம் செய்யவோ முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக நான் பேசவில்லை’ என காணொலியில் பேசியிருந்தாா். பசனகௌடா பாட்டீல் யத்னலின் கருத்தை பாஜக மறுத்துள்ளது.

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பசன கௌடா பாட்டீல் யத்னல் பேசுவது இது முதல்முறையல்ல. கடந்த ஜூன் மாதம் செய்தியாளா்களிடம் பேசிய பசன கௌடா பாட்டீல் யத்னல், ‘பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவும் தான் எனது தலைவா்கள். எடியூரப்பா வெறும் முதல்வா் மட்டுமே’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT