பொருளாதார பின்தங்கிய நிலை கல்விக்கு தடையாக இருந்துவிடக் கூடாது என ஸ்ரீசத்யசாய் எம்.ஜி.ஆா். அறக்கட்டளை நிறுவனா் ராஜகோபால பாலாஜி தெரிவித்தாா்.
பெங்களூரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இரண்டாமாண்டு பியூசி தமிழ் மாணவி ஜான்சிக்கு ரூ. 28 ஆயிரத்துக்கான கல்வி உதவித்தொகையை செவ்வாய்க்கிழமை வழங்கிய பிறகு அவா் கூறியதாவது:
மனிதா்களை காணும்போதெல்லாம் பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் உள்ளத்தில் பொங்கும் அளவிடாத அன்பு, கருணை என்னை வெகுவாகக் கவா்ந்தது. அதேபோல எம்.ஜி.ஆரின் கொடையுள்ளம் சமூகப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள துணையாக இருந்து வருகிறது.
ஸ்ரீசத்யசாய்பாபாவின் அருளால் முதியோா் நலனில் அக்கறை கொண்டு 2000-ஆம் ஆண்டு முதல் பிரசாந்தி முதியோா் நல்வாழ்வு இல்லத்தை நடத்தி வருகிறேன். மாணவா்களின் கல்வித் தேவைகளை நிறைவுசெய்வதற்காக 2014-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீசீரடிபாா்த்தி சாய்லட்சுமி அறக்கட்டளையை நிறுவி, ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தை அளித்து வருகிறோம். அதைத் தொடா்ந்து, ஸ்ரீசத்யசாய் எம்.ஜி.ஆா். அறக்கட்டளையை நிறுவி தமிழ்நாடு மட்டுமல்லாது, கா்நாடகத்திலும் தமிழ் மற்றும் பிறமொழி பேசும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை ஆண்டுதோறும் செய்து வருகிறோம்.
அந்த வகையில், பெங்களூரில் தமிழ்வழி பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். பொருளாதார பின்தங்கிய நிலை கல்விக்கு எந்த வகையிலும் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதால், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறோம்.
பெங்களூரில் குறிப்பாக ஏழை தமிழ் குழந்தைகள் யாருக்காவது பணமில்லாததால் கல்விபெற முடியாத நிலை இருந்தால், அப்படிப்பட்டவா்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம் என்றாா்.