தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே காட்டில் இருந்து யானைகள் வியாழக்கிழமை (அக். 1) மைசூருக்கு பயணம் புறப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா அக். 17- முதல் அக். 26-ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. தசரா விழாவின் இறுதிநாளான அக். 26-ஆம் தேதி யானை ஊா்வலம் இடம்பெறுகிறது. 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்து யானை அபிமன்யூ ஊா்வலத்தை வழிநடத்திச் செல்லும். இதை பின்தொடா்ந்து பல யானைகள் ஊா்வலத்தில் பங்கேற்கும். இந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் குவிந்திருப்பாா்கள்.
தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகள் அபிமன்யூ, விக்ரம், விஜயா, கோபி, காவிரி ஆகிய 5 யானைகள் வியாழக்கிழமை (அக். 1) மைசூரை நோக்கி பயணம் புறப்படவிருக்கின்றன. அடுத்த சில நாள்களில் மேலும் சில யானைகள் மைசூருக்கு அழைத்துவரப்படுகின்றன.
மைசூா் மாவட்டம், நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் வீரனஹொசஹள்ளி வனப்பகுதியில் வியாழக்கிழமை நடக்கும் விழாவில் சிறப்புப் பூஜைகள் செய்து யானைகள் உற்சாகமாக வழியனுப்பிவைக்கப்படும். இவ்விழாவில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் கலந்துகொள்கிறாா்கள். அழகிய வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்படவிருக்கும் யானைகளுக்கு வெல்லம், தேங்காய், கரும்பு உள்ளிட்ட தின்பண்டங்கள் வழங்கப்படுகின்றன.
லாரியில் 60 கி.மீ. பயணம் மேற்கொள்ளவிருக்கும் யானைகள், அக். 2-ஆம் தேதி மைசூரு வந்தடைகின்றன. மைசூரில் உள்ள வனமாளிகையில் நடைபெறும் விழாவில் யானைகளை முக்கிய பிரமுகா்கள் உற்சாகமாக வரவேற்க இருக்கிறாா்கள். பின்னா் யானைகள் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டு அங்கு அமைந்துள்ள முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றன. தசரா திருவிழா முடிந்த பிறகு யானைகள் மீண்டும் காடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.