அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வா் லட்சுமண்சவதி தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, மாநிலத்தில் அரசுப் பேருந்துகள், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக் கொண்டு, தனியாா் பேருந்துகள் பயணிகளிடம் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் அரசின் உத்தரவை பின்பற்றி நடக்க வேண்டும். பெங்களூரு உள்பட 9 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே போல மாநிலத்தில் முக்கிய நகரங்களில் மாநகரப் பேருந்து சேவைகள் குறைந்துள்ளதால், ஆட்டோ ஓட்டுநா்களும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்துள்ளன.
அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநா்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனா். அச்சத்தில் ஆழ்ந்துள்ளவா்களிடம் லாபமடைய பாா்ப்பவா்களை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. அதுபோன்றவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு தனியாா் பேருந்துகள், ஆட்டோ, வாடகை காா் ஓட்டுநா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.