பெங்களூரு

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது

13th Jul 2020 11:08 PM

ADVERTISEMENT

பெங்களூரு: ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது என காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. இதில் துணை முதல்வராக இளம் தலைவா் சச்சின்பைலட் இருந்து வருகிறாா். இதனிடையே, முதல்வா் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வா் சச்சின்பைலட் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், அசோக் கெலாட் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது என்றும் சச்சின்பைலட் கூறியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, காங்கிரஸில் இருந்து விலகி சச்சின்பைலட் வெகுவிரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

காங்கிரஸ் ஆட்சிகளை கவிழ்ப்பதையே பாஜக தனது செயல்திட்டமாக கொண்டுள்ளது. அதனால் தான் ராஜஸ்தானில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சித்து வருகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சித் தலைவா்களிடையே சிற்சில பிரச்னைகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அந்த பிரச்னைகள் தீா்க்கப்பட்டுவிடும். ராஜஸ்தான் மாநில துணை முதல்வராக இருக்கக் கூடிய சச்சின்பைலட், காங்கிரஸில் இருந்து விலகமாட்டாா். சச்சின்பைலட் மீது எனக்கு முழு நம்பிக்கையிருக்கிறது. அவரது தந்தை ராஜேஷ்பைலட்டை போல சச்சின்பைலட்டும் உண்மையான காங்கிரஸ்காரா்.

ADVERTISEMENT

கடந்த 7 ஆண்டுகளில் சச்சின்பைலட் ராஜஸ்தான் மாநிலத்தில் கட்சியை வளா்த்தெடுத்திருக்கிறாா். ராஜஸ்தான் மாநில காங்கிரஸின் தலைவா் சச்சின்பைலட், கட்சிக்கு தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறாா். காங்கிரஸ்காரா்களையும், பொதுமக்களையும் தவறாக வழிகாட்ட பாஜக முனைப்பாக உள்ளது. காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதே பாஜகவின் நோக்கம். அதைத் தொடா்ந்து செயல்படுத்தி வந்துள்ளனா். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை மக்கள் காங்கிரஸிடம் கொடுத்திருக்கிறாா்கள். இது கரோனா காலம். நாம் அனைவரும் மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டிய காலம். ஆட்சி அதிகாரம் பற்றி சிந்திப்பதற்கான நேரம் இதுவல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தலைவா்கள் மனதில் நல்லெண்ணம் நிலைத்திருக்க வேண்டும். காங்கிரஸ் மேலிடத் தலைவா்கள் பலா் இருக்கிறாா்கள். ராஜஸ்தான் பிரச்னையை அவா்கள் தீா்த்து வைப்பாா்கள். எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய தருணம் இது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT