இந்தியாவில் கொள்முதல் திறன் உயர்ந்திருப்பதால், சில்லரை வர்த்தகம் பெருகி வருகிறது என்று பிக்பஜாரின் மூத்த செயல் அதிகாரி சதாசிவநாயக் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 1991-ஆம் ஆண்டு இந்தியாவில் உலகமயமாக்கல் அல்லது தாராள பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, 28 ஆண்டுகளில் இந்தியாவின் சில்லரை சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்தியாவில் கூடுதல் வருமானம்பெறும் நடுத்தர வர்க்கத்தினரிடம் கொள்முதல் திறன் உயர்ந்துள்ளது. தாராளமயமாக்கலால் கிடைத்துள்ள புதிய ஆடம்பரங்களை அனுபவிக்க நடுத்தர மக்கள் விரும்புகின்றனர். இதன்காரணமாக, இந்தியாவில் சில்லரை வர்த்தகம் பெருகி வருகிறது. இது சில்லரை வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் நாளுக்குநாள் பெருக வழிவகுத்துள்ளது. உலக அளவிலான மிகப்பெரிய நிறுவனங்கள் பல இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இது பிக்பஜார் போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதால், விற்பனையைப் பெருக்குவதற்கான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வருகிறோம். அந்தவகையில் கோடைகால விடுமுறையை ஒட்டி சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருள்களையும், நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், சீருடை, ஷூ உள்ளிட்டவைகளை மே 5-ஆம் தேதி வரை விற்பனை செய்கிறோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது என்றார் அவர்.