ஓவியம், சிற்பக் கலைஞர்களை ஊக்குவிக்க கண்காட்சி, திருவிழாக்கள் அவசியம் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ஷோபா கரந்தலஜே தெரிவித்தார்.
பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் வெள்ளிக்கிழமை பெங்களூரு திருவிழாவைத் தொடக்கிவைத்த அவர், திருவிழாவில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட பொருள்களை பார்வையிட்டார். தனக்கு பிடித்த சிற்பங்கள், ஓவியங்கள் வாங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேசிய அளவில் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. என்னை போன்ற அரசியல் வாதிகளுக்கு அரசியல் மட்டுமின்றி, இது போன்ற திருவிழா, கண்காட்சிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது.
பெங்களூரு திருவிழாவில் கலந்து கொள்வது உற்சாகத்தை அளித்துள்ளது. ஓவியம், சிற்பக் கலைஞர்களை ஊக்குவிக்க கண்காட்சிகள், திருவிழாக்கள் அவசியம். கர்நாடக சித்ரகலாபரிஷத்தும் கலைஞர்களை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருவது பராட்டுதலுக்குரியது. மே 12-ஆம் தேதி வரை நடைபெறும் பெங்களூரு திருவிழாவில் கலைஞர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் கர்நாடக சித்ரகலாபரிஷத்தின் தலைவர் பி.எல்.சங்கர், செயலாளர் கமலாக்ஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.