கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பங்களிப்பை காலம் மறக்காது என்று தனபிவிருத்தி கடன் கூட்டுறவு சங்க வங்கி நிறுவனத் தலைவர் எஸ்.சுந்தரவேலு தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, பெங்களூரில் திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், சுந்தரவேலு பேசியது: -
காமராஜரைப் போல இன்னொரு தலைவரை உலகத்தில் கண்டுபிடிக்க முடியாது. தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவையை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர்.
பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்றவர். மதிய உணவுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகம் செய்ததே காமராஜர்தான்.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பங்களிப்பை காலம் மறக்காது. முதல்வராகப் பதவியேற்றபோது 7 சதவீதமாக இருந்த கல்வி அறிவு, 9 ஆண்டுகால ஆட்சியில் 37 சதவீதமாக உயர்த்தியவர்.
பல்வேறு நீர்நிலைகளில் அவர் எழுப்பிய அணைகள் போல் எவரும் இன்று வரை எழுப்பவில்லை.
"காமராஜரைப் போல எளிமையான தலைவரை உலகில் எங்கும் கண்டதில்லை' என உலகப் புகழ்பெற்ற அறிஞர் லியொனார்ட் டாவின்சி புகழ்ந்துள்ளார்.
பிரதமர் பதவி தேடிவந்தபோதும், லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றவர்களுக்கு வழங்கி 'கிங் மேக்கராக' விளங்கினார். அனைத்து மக்களையும் ஜாதி பேதமின்றி சமமாகவே போற்றினார் என்றார்.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ப.இளவழகன் தலைமை வகித்தார். பெங்களூரு மாநகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஜி.சம்பத், சங்கச் செயலர் வே. அரசு, துணைத் தலைவர் மா.நடராஜ், சங்கப் பொருளாளர் சி. கண்ணன், எம்.ஆர்.பழனி, பொன்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.