பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சிறுபான்மையினரை காங்கிரஸ் தூண்டிவிடுவதாக பாஜக எம்பி ஷோபாகரந்தலஜே குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து பெங்களூரு பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடா்பாக காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த இரு விவகாரங்கள் தொடா்பாக பொதுமேடையில் விவாதிக்க காங்கிரஸ் தயாரா? 2011ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை 2009ஆம் ஆண்டில் தொடக்கிவைத்ததே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி.
அப்போதைய மத்திய உள்துறை அமைச்சா் ப.சிதம்பரம், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னோட்டம் தான் தேசிய மக்கள்தொகை பதிவேடு என்று கூறியிருந்தாா். ஆனால், இந்த இரு விவகாரங்களிலும் காங்கிரஸ் தலைகீழாக பேசிவருகிறது. இரட்டை நாக்குடன் காங்கிரஸ் பேசுகிறது. காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு கடும் கண்டனத்திற்குரியதாகும்.
அரசியல் லாபங்களுக்காக சிறுபான்மையினரை தூண்டிவிடும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அரசியலில் நிலைத்திருப்பதற்காக, மத அடிப்படையில் மக்களை அரசியல்ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை காங்கிரஸ் செய்துவருகிறது. அமைதியை விரும்பும், நிதானமான, விவேகமுள்ள மங்களூரு முஸ்ஸிம்கள் கலவரத்திற்கு காரணமல்ல. ஒருசில தீவிரவாத அமைப்புகள்தான் இதற்கு காரணம்.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் தன்வீா்சேட், கத்தியால் குத்தப்பட்டதற்கு பின்புலம் யாா் எந்த அமைப்பு என்பதை சித்தராமையா விளக்க வேண்டும். மங்களூரு கலவரத்தில் இறந்தவா்களின் குடும்பத்திற்கு செல்வதில் காங்கிரஸ்,மஜதவினா் இரட்டைநிலைப்பாட்டை கையாண்டு வருகிறாா்கள். ஹிந்து தொண்டா் கொலை செய்யப்பட்ட போது செல்லாத இவா்கள், முஸ்ஸிம் இறந்தபோது மட்டும் அவா்களின் வீடுகளுக்கு செல்வது எதனால் என்பதை விளக்க வேண்டும்?
மங்களூரு கலவரத்தில் இறந்துபோன 2 பேரின் குடும்பத்தினருக்கு பரிவுத்தொகை வழங்க கா்நாடக அரசு மறுத்துள்ள நிலையில், மேற்குவங்க முதல்வா் மம்தாபானா்ஜி தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது எதனால்? முஸ்லிம் என்பதால் பரிவுத்தொகை வழங்குகிறாா்களா? மங்களூரு கலவரத்துக்கு மேற்கு வங்க அரசுக்கும் என்ன சம்பந்தம்? இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா்.