தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக நாகரஹொளே வனப் பகுதியில் இருந்து மைசூருக்கு வருகை தந்த யானைப் படைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகப் புகழ்ப் பெற்ற தசரா திருவிழா 409-ஆம் ஆண்டாக செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் இறுதிநாளான அக்டோபர் 8-ஆம் தேதி யானைகள் ஊர்வலம் இடம்பெறுகிறது. யானை அர்ஜுனா, 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்துகொண்டு ஊர்வலத்தை வழிநடத்திசெல்லும். இதைப் பின்தொடர்ந்து பல யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும். இந்தக் கண்கொள்ளா காட்சியைக் காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரள்வர். இந்தத் தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகள் அர்ஜுனா, அபிமன்யூ, வரலட்சுமி, தனஞ்செயா, விஜயா, ஈஸ்வரா ஆகிய 6 யானைகள் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மைசூரு மாவட்டம், ஹுனசூர் வட்டம், நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில் உள்ள வீரனஹொசஹள்ளி வனப்பகுதியில் இருந்து மைசூரை நோக்கி பயணம் புறப்பட்டன.
இந்த 6 யானைகளும் திங்கள்
கிழமை மைசூருவில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டன. அங்கு வழக்கமான உற்சாகத்தோடு யானைகளுக்கு உற்சாக வரவேற்புஅளிக்கப்பட்டது.
அதேபோல, மைசூருவில் உள்ள அரண்மனைக்கு முறைப்படி யானைகளை அழைத்துவருவது சம்பிரதாயம். அதன்படி, யானைப்படையை திங்கள்கிழமை அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டன. அழகிய, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைப்படைக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.சோமண்ணா தலைமையில் பூரணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யானைப்படைக்கு அமைச்சர் வி.சோமண்ணா, பாரம்பரியமுறையில் சிறப்புபூஜை செய்து கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்டதின்பண்டங்களை கொடுத்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் அபிராம்சங்கர், மைசூர் மேயர் புஷ்பலதா ஜெகநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்கவைக்கப்பட்டன. அக்.8-ஆம் தேதிவரை அங்கு தங்கியிருக்கும் யானைகளுக்கு அதன் பாகன்கள் பயிற்சி அளித்து பராமரிப்பார்கள்.