இந்திரா உணவகத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு மாநகராட்சியில் மலிவுவிலையில் உணவு வழங்குவதற்காக இந்திரா உணவகங்களை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய முதல்வர் சித்தராமையா செயல்படுத்தினார். இந்தத் திட்டத்தின்கீழ் 174 உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்த திட்டத்தில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு முதல்வர் எடியூரப்பா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,"பெங்களூரு மாநகராட்சியில் செயல்பட்டுவரும் 174 இந்திரா உணவகங்கள், 15 நடமாடும் உணவகங்களில் மாதம்தோறும் 62.70 லட்சம் பேருக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டுவருகிறது.
இந்திரா உணவகத்தை நிர்வகித்துவரும் ஷெஃப்டாக் ஃபுட்ஸ், ரிவார்ட்ஸ் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.6,82,81,373 மானியமாக அளிக்கப்பட்டுவருகிறது. இந்த புள்ளிவிவரங்களில் புள்ளிவிவரங்களில் தவறாக இருப்பதோடு, மானியமாக பெருந்தொகையை பெற்று முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை அளிக்க உத்தரவிடுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.