நெற்பயிரில் எளியமுறை பூச்சி மேலாண்மை

நெற்பயிரில் எளிய முறை பூச்சி மேலாண்மை குறித்து, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ், மு.ராமசுப்பிரமணியன்
நெற்பயிரில் எளியமுறை பூச்சி மேலாண்மை


நீடாமங்கலம்: நெற்பயிரில் எளிய முறை பூச்சி மேலாண்மை குறித்து, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ், மு.ராமசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க நெல் சாகுபடியில் உழவியல் முறைகளை சரியாக பின்பற்றினாலே பெரும்பான்மையான பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க முடியும். 
அதிக பயிர் இடைவெளி: குறைந்த அளவு பயிர் இடைவெளி இருக்கும் போது புகையான், ஆனைக்கொம்பன் ஈ மற்றும் இலை மடக்குப்புழுவின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். ஒற்றை நாட்டு முறையில் வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ மற்றும் செடிக்கு செடி 22.5 செ.மீ இடைவெளியில் நடப்படுவதால் பூச்சிகளின் தாக்குதல் குறைவாகக் காணப்படும். 
நீர் நிர்வாகம்: வெள்ள நீர்ப் பாய்ச்சுவதால் ஆனைக்கொம்பன் ஈ, மாவுப்பூச்சி மற்றும் படைப்புழுவின் தாக்குதல் குறைவாக இருக்கும். தண்ணீரை 3 அல்லது 4 நாள்களுக்கு வடித்து விடுவதால் புகையான் மற்றும் குருத்து ஈ ஆகியவற்றின் தாக்குதலைக் குறைக்க இயலும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் கட்டுவதால் புகையான் மற்றும் நாவாய்ப்பூச்சிகளின் தாக்குதல் குறையும்.
தண்ணீர் சிக்கனப் பயன்பாட்டிற்கும் பூச்சிகளின் தாக்குதலை வெகுவாகக் குறைப்பதற்கும் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் கட்டுவது அவசியமாகும். ஆனால் பூக்கும் தருணம், பால்பிடிக்கும் தருணம் ஆகிய தருணங்களில் வயலில் நீர் இருப்பது அவசியமாகும்.
களைக் கட்டுப்பாடு: களைகளானது பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளுக்கும் மற்றும் நோய் காரணிகளுக்கும் மாற்று உறைவிடமாய் இருந்து அவற்றின் பெருக்கத்துக்கு உதவி புரிகின்றன. எனவே, வயல்களிலும், வரப்புகளிலும் களைகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது முக்கியமானதாகும்.
உர நிர்வாகம்: மக்கிய தொழு உரம், பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களை அதிகளவில் வயலுக்கு இடவேண்டும். தழைச்சத்து உரங்களை அதிகளவு பயன்படுத்தினால் நெற்பயிரானது பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும். மிதமான மற்றும் அதிகமான சாம்பல் சத்து உரங்கள் பயிர்களை பூச்சிகள் தாக்கா வண்ணம் காக்கும். மண் பரிசோதனை முடிவுகளின்படி பரிந்துரை செய்யப்படும் அளவுகளில் மட்டுமே ரசாயன உரங்களை வயலில் இடவேண்டும். 
தழைச்சத்து நிர்வாகம்: தழைச்சத்து உரங்களை தேவைக்கு அதிகமாக அளிக்கும்போது குருத்துப்பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, புகையான் மற்றும் இலைமடக்குப்புழு ஆகியவற்றின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தழைச்சத்து உரங்களை 3 அல்லது 4 முறைகளாகப் பிரித்து  ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் 5:4:1 என்ற அளவில் கலந்து அளிப்பதன் மூலமாக பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க இயலும். 
வரப்பு பயிர்கள்: வயல் வரப்புகளில் உளுந்து மற்றும் தட்டைப் பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் உயிரினங்களான பொறிவண்டு, சிலந்திகள் போன்றவை அதிக எண்ணிக்கையில் பெருகி நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்கும். 
பயிர் சுழற்சி முறை: நெற்பயிரையே தொடர்ந்து பயிர் செய்வதைத் தவிர்த்து உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, எள், கடலை, காய்கறிப் பயிர்கள் போன்றவற்றைப் பயிர் செய்வதன் வாயிலாக பல்வேறு தீமை செய்யும் பூச்சிகள் தங்களது வாழ்க்கை சுழற்சிக்கு தேவையான பயிர்கள் இல்லாத காரணத்தால் அவற்றினால் தொடர்ந்து பல்கி பெருக இயலாமல் இறந்துவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com