கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்

மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறுஉப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்
கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்


அரக்கோணம்: மூலிகை மருத்துவத்தின் மூலம் கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடிவீக்க நோய், வயிறுஉப்புசம், கழிச்சல் நோய்களை சரிப்படுத்தலாம் என தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மைய பேராசிரியர்களும், மரபுசார் மூலிகை வழி கால்நடை மருத்துவப் பயிற்சி ஆய்வகப் பேராசிரியர்களும் அரக்கோணம் வந்தபோது தெரிவித்தனர்.

மடிவீக்க நோய்: கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத் தன்மையுடனும் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பால் திரிந்து வெள்ளையாகவோ, மஞ்சள் அல்லது ரத்தம் கலந்தோ காணப்படும். 

இதை குணப்படுத்த மடியினை நன்கு கழுவி சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாட்டுக்குத் தேவைப்படும் மூலிகை, மருத்துவப் பொருள்களாக 250 கிராம் சோற்றுக் கற்றாழை, 50 கிராம் மஞ்சள் பொடி, 15 கிராம் அதாவது ஒரு கொட்டைப் பாக்கு அளவு சுண்ணாம்பு ஆகியவை தேவைப்படும். மேற்கண்ட பொருள்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு நீர் விட்டுக் கரைத்து, நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாகத் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை மடிவீக்கம் குறையும் வரை குறைந்தது 5 நாள்களுக்குப் பூச வேண்டும். தினமும் புதிதாக மருந்து தயாரித்துக் கொள்ள வேண்டும்.  

வயிறு உப்புசம்: கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளால் ஏற்படுகிறது. இது மிக அதிகமான, எளிதில் செரிக்கக்கூடிய தானிய வகை உணவு, ஈரமான பசுந்தீவனங்களை அவை உண்பதால் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க ஒரு மாட்டுக்கு 10 வெற்றிலைகள், 5 பல் பூண்டு, 10 பிரண்டை, 10 மிளகு, 5 பல் வெங்காயம், சின்ன ஜீரகம் 5 கிராம், இஞ்சி 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 

இவற்றை வாய்வழியாக மாடுகளுக்கு அளிக்க வேண்டும். சின்ன ஜீரகம், மிளகை இடித்து பின்பு மற்ற பொருள்களோடு அரைத்து அக்கலவையை 100 கிராம் பனை வெல்லத்துடன் கலந்த பின் சிறுசிறு உருண்டைகளாகப் பிரித்து, கல் உப்பு தொட்டு மாட்டினுடைய நாக்கின் மேல் அழுத்தமாக தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும். 

கழிச்சல்: நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். வால், பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச்சத்துக்கள், தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகளும், மாடுகளும் சோர்ந்து காணப்படும்.இதை சரிப்படுத்த ஒரு மாட்டுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு சின்னஜீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம், வெந்தயம் 10 கிராம், 5 மிளகு, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்றாக கருகும் வரை வறுத்து அடுத்து நீர் தெளித்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

மேலும் 2 பல் வெங்காயம், 2 பல் பூண்டு, 10 இலை கருவேப்பிலை, பனை வெல்லம் 100 கிராம் ஆகியவற்றை நன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரு கலவைகளையும் கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்த்து எடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தபடி ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும் என்று சிகிச்சை முறைகளை பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அவ்வப்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சிறப்புக் கால்நடை முகாம்களில் முதல் உதவி மூலிகை மருத்துவம் குறித்து, கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com