தை பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு

தை பட்ட காய்கறிகளுக்கான விலை குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தை பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு


கோவை: தை பட்ட காய்கறிகளுக்கான விலை குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மொத்த காய்கறி உற்பத்தியில் தக்காளி 11 சதவீத பங்களிக்கிறது. தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, இந்தியாவில் 7.86 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு 1.93 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சேர்ந்து இந்தியாவின் மொத்த தக்காளி உற்பத்தியில் 54 சதவீதம் பங்களிக்கின்றன.
நாட்டின் மொத்த தக்காளி உற்பத்தியில் தமிழ்நாடு 5 சதவீதத்துக்கும் குறைவாகவே பங்களிக்கிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
தமிழ்நாட்டில் அனைத்து பருவங்களிலும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டாலும் தை பட்டத்திலேயே அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. கோவை சந்தைகளுக்கு நாச்சிபாளையம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிகளவில் வருகிறது. வரும் மாதங்களில் கர்நாடகத்தில் இருந்து வரும் வரத்தே தக்காளி விலையின் ஏற்ற இறக்கத்தைத் தீர்மானிக்கும்.
கத்திரி: தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூன்றாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, இந்தியாவில் கத்திரி 7.36 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 1.28 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 69 சதவீதம் பங்களிக்கின்றன.
தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் கத்திரி பயிரிடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி, கோவை, மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து போதுமான அளவு வரத்து உள்ளது.
வெண்டை: வெண்டை இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிர்களில் ஒன்றாகும். நாட்டில் 5.14 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெண்டை பயிரிடப்பட்டு 61.26 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. வெண்டைக்காய் உற்பத்தியில் மேற்கு வங்கம், குஜராத், பிகார், ஒடிஸா, மத்தியப் பிரதேச மாநிலங்கள் சேர்ந்து 59 சதவீதம் அளவுக்கு பங்களிப்பை வழங்குகின்றன. தமிழ்நாட்டில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோவை, மதுரை மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன.
மேற்கண்ட காய்கறிகளின் விலையானது பருவநிலை மாற்றங்களுக்கும், உள்ளூர் சந்தை வரத்துகளுக்கும் உள்பட்டதாகும். இந்த சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவிய தக்காளி, கத்திரி, வெண்டைக்காய் விலைகள் குறித்து சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில் அறுவடையின்போது தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.12 முதல் ரூ.14 வரையும், நல்ல தரமான கத்திரிக்காயின் விலை ரூ.17 முதல் 19 வரையும், வெண்டைக்காயின் விலை ரூ.15 முதல் ரூ.17 வரையும் இருக்கும் என்றும், இதன் அடிப்படையில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கும்படியும் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறைத் தலைவரையோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்கள் 0422 2431405, 6611374.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com