மக்காச்சோளப் பயிரை காப்பாற்ற படைப் புழு தடுப்பு மேலாண்மை

படைப்புழு (ஸ்போடாப்டிரா புருஜிபர்டா) தாக்குதலால் கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட
மக்காச்சோளப் பயிரை காப்பாற்ற படைப் புழு தடுப்பு மேலாண்மை


கடலூர்: படைப்புழு (ஸ்போடாப்டிரா புருஜிபர்டா) தாக்குதலால் கடந்த ஜூலை மாதம் முதல் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச் சோளப் பயிர்கள் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் ஒட்டுரகம் மற்றும் இதர ரகங்களில் படைப்புழுக்களின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.
குளிர்ச்சியான பருவ நிலையில், விட்டு, விட்டு மழை பெய்யக்கூடிய காலங்களில் இந்தப் புழுவின் தாக்குதல் அதிகரிப்பது வழக்கம். 
சேதம்: மக்காச்சோளப் பயிரில் 15 நாள்கள் முதல் வளரக்கூடிய குருத்துப் பகுதியில் இந்தப் புழுக்கள் சேதத்தை விளைவிக்கின்றன. இந்த புழுக்கள் உண்ணுவதால் இலைகளில் வரிசையான, சிறிய, பெரிய வட்ட வடிவம் அல்லது வடிவமற்ற துவாரங்கள் காணப்படுகின்றன. சில செடிகளில் இலைகளின் மேல் பகுதி முற்றிலும் உண்ணப்படுவதால் இலை மடிந்துவிடும். இந்த புழுக்கள் கதிர்களின் நுனி மற்றும் காம்புப் பகுதியை உண்ணும் திறன் கொண்டவை.
வாழ்க்கை சுழற்சி: தாய் அந்துப் பூச்சிகள் 100-200 முட்டைகளை குவியலாக இலைகளில் இட்டு, அதனை வெள்ளை நிற ரோமத்தால் மூடிவிடும். இந்த முட்டைகளிலிருந்து 2-3 நாள்களில் பச்சை நிற இளம் புழுக்கள் வெளிவந்து, இளம் இலைகளின் பச்சையத்தை சுரண்டி உள்கொள்ளும். அதன் பின் குருத்து இலைகளை சேதப்படுத்தும். 
15-20 நாள்களில் முதிர்ந்த புழுக்கள் மண்ணில் சென்று கூட்டுப் புழுவாக மாறிவிடும். கூட்டுப் புழுக்களிலிருந்து 8-9 நாள்களில் தாய் அந்து பூச்சிகள் வெளிவந்து 10 முதல் 15 நாள்கள் வரை உயிரோடு இருந்து முட்டைகளை இடும். தாய் அந்துப் பூச்சிகள் இரவு நேரங்களில் செயல்படும். ஆண் பூச்சிகளின் அரக்கு நிற முன் இறக்கைகளின் நுனிப் பகுதியில் முக்கோண வடிவ வெள்ளைப் புள்ளி காணப்படும். பெண் பூச்சிகளில் இந்த முக்கோண புள்ளி இருக்காது. ஆண் மற்றும் பெண் பூச்சிகளில் வெள்ளை நிறமான பின் இறக்கைகளின் ஓரத்தில் அரக்கு நிறம் காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: ஆழமான உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்கள் வெளிப்படும்பொழுது சூரிய ஒளி, பறவைகளால் அவை அழிக்கப்படும். அவ்வாறு செய்வதால் அந்துப்பூச்சி உருவாகுவதை தடுத்து மேற்கொண்டு அடுத்து பயிரிடும் பருவத்துக்கு பாதிப்பு வராமல் தடுக்க இயலும்.
உழவு செய்யும்பொழுது ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இடுவதன் மூலம் கூட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தி அந்துப்பூச்சி வெளிவருவதை தடுக்க இயலும். ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியான பிவுரியா பேசியானா அல்லது 10 கிராம் இமிடாகுலோபிரிட் 70டபிள்யு.எஸ். அல்லது 10 கிராம் தயோமீதாக்சம் 70டபிள்யு.எஸ். கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். குறைவான பயிர் இடைவெளியால் பயிர்களுக்கிடையே படைப்புழுக்கள் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, இறவை மக்காச்சோளத்துக்கு 60-க்கு 25 செ.மீ. பயிர் இடைவெளியும், மானாவாரி மக்காச் சோளத்துக்கு 45-க்கு 20 செ.மீ. பயிர் இடைவெளியும் இருக்கும் வகையில் பயிரிட வேண்டும். மக்காச் சோளப்பயிரில் கதிர் உருவாகும் பருவத்தில் படைப் புழுக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எளிதில் தெளிப்பதற்கு ஒவ்வொரு 10 வரிசை பயிருக்கும் 75 செ.மீ. இடைவெளி விட வேண்டும்.
தாய் அந்துப் பூச்சிகளை கவனிக்க மற்றும் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகள் அல்லது சாதாரண மின் விளக்குகளுக்கு கீழ் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து ஹெக்டேருக்கு 1 என்ற வீதத்தில் அடிக்கடி இடம் மாற்றி வைக்க வேண்டும். இயற்கை ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகளை ஊக்குவிக்க குறுகிய காலப் பயிர்களான தட்டைப் பயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிர்களை வரப்பில் பயிரிட வேண்டும்.
மக்காச் சோளப்பயிரில் சிறுபுலாட்டின் பயிரை ஊடுபயிராக பயிரிட்டால் அந்துப்பூச்சிகள் தாக்குதலை தடுக்க இயலும். படைப்புழுவின் முட்டைக் குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும். தொடர்ந்து மக்காச் சோளத்தை பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த இயலும். நுண்ணுயிர் பூச்சிக் கொல்லியான மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற கலவையை ஹெக்டேருக்கு 3 லிட்டர் வீதம் தெளிக்க வேண்டும். 
இயற்கையாக இருக்கும் இரை விழுங்கிகளை காப்பதற்கு பரிந்துரை இல்லாத பூச்சி மருந்துகளை தவறான முறையில் தெளித்தல், அதிகளவு பூச்சி மருந்துகள் பயன்படுத்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோரோமா கைலோனிஸ் 2 சிசி தெளிப்பதன் மூலம் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
பரிந்துரை செய்யப்படும் மருந்துகள்: அசாடிராக்டின் 10000 பிபிஎம், தயோடிகார்ப் 75 டபிள்யு-பி, எமாமெக்டின் பென்சோயேட் 5எஸ்ஸி, ஸ்பைனிடோரம் 12 எஸ்ஸி ஆகிய மருந்துகளை பயன்படுத்தலாம். விசைத் தெளிப்பானை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். ஒரு முறை உபயோகித்த பூச்சி மருந்தை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. பூச்சி மருந்தை செடியின் குருத்துப் பகுதியை நோக்கி தெளிக்க வேண்டும். 
மக்காச்சோளம் தவிர கரும்பு, கேழ்வரகு, கம்பு ஆகிய பயிர்களிலும் படைப் புழுக்களின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப வழிமுறைகளைக் கையாண்டு பாதுகாத்துக்கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com