தைவானில் ஞாயிற்றுக்கிழமை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
புயுமா விரைவில் ரயில் டைடங் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மாலை 4.50 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஷின்மா ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள லூவடோங் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த ரயிலில், 366 பேர் பயணம் செய்துள்ளனர். விபத்தின் போது ரயில் வேகமாக குலுங்கியதுடன் தண்டவாளத்திலிருந்து விலகி சென்றுள்ளது. ரயிலின் எட்டு பெட்டிகளும் தடம் புரண்டன. ஐந்து பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 132 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் எவரும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து உறுதிசெய்யப்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 120 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை மிகப்பெரிய துயர சம்பவம் என்று கூறியுள்ள தைவான் அதிபர் டிசாய் இங்-வென் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை சுட்டுரைப் பதிவில் ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.