பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்

பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எந்தெந்த நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பது குறித்தான கொள்கை முடிவை எடுக்கும் சூழ்நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக, பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்து புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு கண்மூடித்தனமாக நிதியை அளித்து வந்துள்ளோம்.
அந்த நிதியைக் கொண்டு, அமெரிக்க ராணுவ வீரர்களையும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கில் வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் முறையாகப் பயன்படுத்தவில்லை. 
நிதியைக் கொடுத்து பலனை எதிர்பார்க்கும் அமெரிக்காவின் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இனிவரும் காலங்களில், அமெரிக்காவுக்குப் பலன் ஏற்படும் வகையில், பாகிஸ்தான் நடந்து கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும். பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதை நிறுத்தும்வரை அந்நாட்டுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி அளிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்தை ஒடுக்க எங்களுக்கு உதவி செய்யாத பாகிஸ்தானுக்கு நாங்களும் நிதியுதவி அளிக்க மாட்டோம்; பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் வரை பாதுகாப்புக்கான நிதியுதவி அளிக்கப்படமாட்டாது என்று கடந்த நவம்பர் மாதம் உறுதிபடத் தெரிவித்திருந்தார். 
மேலும், பாகிஸ்தானுக்கு அளிக்க இருந்த சுமார் ரூ.11ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com