""எங்கள் அலுவலகத்திற்கு தொழில் தொடங்குவது சம்பந்தமான ஆலோசனைகள் பெறுவதற்கு நிறைய பெண்கள் வருவதுண்டு. அவர்களிடம் பேசும்போது அவர்களின் குடும்ப சூழ்நிலை, பொருளாதார நிலைமை ஆகியவற்றிற்கு தகுந்த தொழிலை செய்ய சொல்லி ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். அவ்வாறு வந்தவர்களில் தொழில் தொடங்கி வெற்றிகரமாக செய்துவரும் இல்லத்தரசிகளின் அனுபவங்களை அடிக்கடி குறிப்பிடுகிறோம். இதுபோன்ற வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள் தினமணி வாசகர்களாகிய உங்களுக்கு பயனுள்ளதாக, ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்ற நோக்கில் அதை தெரிவிக்கிறோம். சரி இந்த வாரம் என்ன பிசினஸ் செய்யலாம் என பார்ப்போம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
""பெரும்பாலான வீடுகளில் தையல் மிஷின் இருக்கும். ஆனால், அவர்களுக்கு பிளவுúஸô, சுடிதாரோ எதுவும் தைக்க தெரியாது. ஆனால் சாதாரணமாக துணி தைக்கத் தெரியும். சிலர், வீட்டு உபயோகத்திற்கு மட்டும் தையல் பயன்படுத்துவர். இதுபோன்று வீட்டில் உள்ள தையல்மிஷினை வைத்து ஒரு சின்ன ஐடியா தெரிவிக்கிறேன்.
ஜன்னல் கொசுவலை: இப்போது எங்கு பார்த்தாலும் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்களினால் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி அனைவருமே அறிவோம். பொழுது போனால் ஜன்னல்களை திறந்து வைக்க முடியவில்லை. கொசுக்களுக்கு பயந்து கதவு, ஜன்னல்களை மூடி வைத்தால் மூச்சு முட்டுவது போன்று இருக்கும். ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். அதே சமயம் கொசுக்கள் வரக் கூடாது இது மிகவும் சுலபம். ஜன்னல்களுக்கு கொசுவலை அடிப்பதுதான். நிறைய வீடுகளில் ஏற்கெனவே போட்டிருப்பார்கள். சிலர் செலவு அதிகம் என நினைத்து போடாமல் இருப்பார்கள் அவர்களை அணுகி இந்த தொழிலை செய்யலாம்.
இதை எப்படி செய்வது, முதலில் எந்த ஜன்னலுக்கு கொசுவலை அடிக்க வேண்டுமோ அதன் அளவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஹார்டுவேர்ஸ் கடைகளில் கொசு வலைகள் தரம் வாரியாக, கலர் கலராக கிடைக்கிறது. உங்களுக்கு தேவையான கொசுவலை வாங்கி கொள்ளுங்கள். இதை ஜன்னல் அளவுக்கு ஏற்றவாறு வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வல்குரோ எனப்படும் ஒட்டிக் கொள்ளக் கூடிய டேப் ரோல்கள் கிடைக்கும். இதன் மென்மையாக இருக்கும் ஒரு பகுதியை வலையின் ஓரங்களில் தையல் மிஷினில் வைத்து இரண்டு தையல்களாக தைக்க வேண்டும். பிறகு வல்குரோவுடன் சொர சொரப்பான மற்றொரு டேப்பை மர ஐன்னலில் ஓரம் வைத்தாற்போல் நான்கு புறமும் வைத்து இதற்கென உள்ள ஸ்டேப்ளர் கொண்டு நன்றாக பின்அடிக்க வேண்டும். பின்னர் தைத்து வைத்த கொசு வலையை இதன் மீது ஒட்ட வேண்டும். இதை தேவைப்படும் போது பிரிக்கவோ, மூடவோ முடியும். இந்த கொசுவலை சிறிது அழுத்தமாக இருக்கும். அதனால், முதலில் உங்கள் வீட்டிற்கு முயற்சி செய்யுங்கள். அதிலேயே அதன் நுணுக்கங்கள் தெரிந்து விடும். பிறகென்ன நம் கையில் ஒரு தொழில் கிடைத்து விடுகிறது.
அடுத்ததாக, சிறிய குழந்தைகளுக்கானது. குழந்தைகளை தூளியில் போட்டு தூங்க வைப்போம். குழந்தைகளை கொசு கடிக்காமல் இருக்க இருக்கமாக தூளியை துணி போட்டு மூடி வைப்போம். அப்படியும் கீழ்பக்கம் வந்து கொசு கடிக்கும். இந்த பிரச்னைக்கு தீர்வாக ஒரு கொசுவலை யாரிக்கலாம். இதுவும் மிக சுலபம்தான். மெல்லியதான துணி போன்ற கொசு வலையை மீட்டர் கணக்கில் வாங்க வேண்டும். தூளியின் அளவுக்கு ஏற்றவாறு 5 அடி அல்லது 6 அடி உயரம் இருக்க வேண்டும். அகலம் 4 அடி மொத்தத்தில் இருக்க வேண்டும். இந்த அளவிற்கு கொசு வலை துணியை வெட்டி எடுத்து அதன் மேல்பாகம் ஸ்கிரீனுக்கு மடித்து தைப்பது போன்று தைத்து அதில் ஒரு கயிறு கோர்க்க வேண்டும். இந்த வலையை தூளியைச் சுற்றி மூடும் அளவு சேர்த்து லுங்கி தைப்பது போன்று தைக்க வேண்டும். பிறகு கீழ் பாகத்தில் 6 இன்ச் அகலத்தில் துணி வைத்து தைத்து அதை மூடுவதற்கு ஏற்ப ஜிப் வைத்து தைக்க வேண்டும் . இதை தூளியில் போடுங்கள் கொசு குழந்தைகளின் பக்கம் வரவே வராது. இதை தயாரித்து கடைகளில் விற்பனை செய்யலாம். இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை தையல் தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்ததாக வீட்டில் உள்ள தையல் மிஷின் கொண்டு சோபாக்களுக்கு உறை தைத்தல். பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து வீடுகளில் சோபாக்கள் ஃபோம் , குஷன் சோபாவாக இருக்கும். இதன் உட்காரும் குஷன் தனியாகவும், சாயும் பகுதி குஷன் தனியாகவும் இருக்கும். இவற்றிற்கு உறைகளை தையல் கடைக்காரர்கள் தைப்பது இல்லை. மேலும், இந்த ஃபோம் குஷன் தற்போது பல மாடல்களில் இருக்கின்றன. இதனால் இதற்கு ரெடிமேடாக குஷன் கவர் கிடைப்பது இல்லை. இந்த குஷனுக்கு உறை தைப்பதற்கென தனியாக விதவிதமாக துணிகள் விற்கப்படுகின்றன. இவற்றின் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு அதன் விலைக்கேற்ப குஷன் உறைகளுக்கு விலை நிர்ணயம் செய்யலாம். இது கொசு வலையை விட சற்று நுணுக்கமாக செய்ய வேண்டியது. அளவு சரியாக இல்லாவிடில் பிட்டிங்காக இருக்காது. அதனால் நன்கு அளந்து அதன்படி கவர் தைக்க வேண்டும். முதலில் நம் வீட்டிற்கு, பிறகு அதை வைத்து அடுத்தவர் வீடு, நண்பர், உறவினர் வீடுகளுக்கு செய்து கொடுக்கலாம். பெரிய பர்னிச்சர் கடைகளிலும் ஆர்டர் எடுத்து செய்யலாம். நல்ல வரவேற்பு இருக்கும்'' என்கிறார்.