முக நூலிலிருந்து....
மனைவி அதிகாரம் செலுத்தும்போது, கோபப்படுவதும்...
அதுவே மகள் அதிகாரம் செய்யும்போது...
பெருமைக் கொள்வதும்தான் ஆணின் குணம்!
- கிரிதரன்
"எக்ஸ்க்யூஸ் மீ' என்ற வார்த்தை...
"நகருடா சனியனே...'
என்ற அர்த்தத்திலேயே பல பெண்களால் சொல்லப்படுகிறது.
- சந்திரன் ஏரியா
ஒரு மணி நேரம் தாலாட்டிட்டு தூங்கிட்டானான்னு எட்டிப் பார்த்தா...
ஏன் நிப்பாட்டிட்டான்னு அவன் எட்டிப் பாக்குறான்.
இதெல்லாம் பாவம் மை சன்!
- அ.ப. இராசா
யோசிக்காமல் எடுத்த முடிவுகள் அனைத்தும்,
யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன...
நீண்ட நாட்களாக.
- நட்பென்றால் நாம் என்போம்
சுட்டுரையிலிருந்து...
குற்றவாளியாக்கப்பட்டவனிடம்
தூக்குமேடையில் கேட்கப்பட்டது.... உன்னுடைய
"கடைசி ஆசை என்ன?' என்று.அவன் சொன்னான்:
"எப்படியாவது குற்றவாளியைக்
கண்டுபிடித்து விடுங்கள்' என்று.
- கனகசிங்கம்
ஓராயிரம் குடிசை வீடு...
அண்ணார்ந்து பார்த்தேன்,
பனை மரத்தில்!
- விதுண்
நான் பேருந்தை விட்டு இறங்கிய பின்னும் பயணம் செய்து கொண்டிருக்கிறது...
எனது மீதிச் சில்லறை!
- பழைய சோறு
சொந்த ஊரில் இருக்கும் புளியமரமும், மாமரமும் தந்து விடாத
ஞானத்தையா...
போதிமரம் தந்துவிடப் போகிறது?
- ஓகே கண்மணி
வலைதளத்திலிருந்து...
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிக்க எப்படி மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றனவோ, அப்படி இந்த ஃபேஸ்புக் அடிமைகளையும் மீட்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
முப்பதாண்டுகளாகப் பார்க்காத நண்பனை நேரில் பார்த்தாலும்... ஃபேஸ்புக் நண்பனுக்கு கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறோம் நாம். அல்லது நாளைக்குக் காலை நாலே முக்காலுக்கே புரட்சி வந்துவிடுவதைப் போல மல்யுத்தக் களமாக ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறோம்... இப்போது இது கைகலப்பில் தொடங்கி கொலை வரை சென்று கொண்டிருக்கிறது.
இனி வரும் காலங்கள் ஃபேஸ்புக் ரேப்... ஃபேஸ்புக் மர்டர்... ஃபேஸ்புக் கிட்நாப் எனப் போகும் போலிருக்கிறது... நாம் கணினி முன் அமரும்போதே முகம் தெரியாத மாய உலகினில் பயணிக்கப் போகிறோம் என்கிற உண்மை வெகு சிலருக்கே புரிந்திருக்கிறது.
யாரும் யார் பெயராலும் மோதலை உருவாக்கலாம் என்கிற எதார்த்தம் புரிந்தால் தேவையற்ற மன உளைச்சல்களில் இருந்து விடுபடலாம்.
https://pamaran.wordpress.com