குழந்தை கடத்தல் சம்பவங்களை கொண்டு விழிப்புணர்வு படமாக உருவாகி வருகிறது "அவதார வேட்டை' . வி.ஆர். விநாயக், மீரா நாயர், ராதாரவி, சீனிவாசன், ரியாஸ்கான், சோனா, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கதை எழுதி இயக்குகிறார் ஸ்டார் குஞ்சுமோன். படம் குறித்து பேசும் போது... ""நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்த கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், க்ரைம் த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, ஏதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. அன்பும், போராட்டமும்தான் இந்த மானூடத்தின் நிரந்தரம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை'' என்றார் இயக்குநர். படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஊட்டி பகுதிகளில் நடந்து வருகிறது.