விஜயதசமியை முன்னிட்டு, திருவாரூர் அருகே உள்ள கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கென தனிக்கோயில் உள்ளது. புலவர் ஒட்டக்கூத்தரால் வணங்கி வழிபாடு செய்யப்பட்ட கோயில் இதுவாகும். கல்வி மற்றும் கலைகளில் சிறக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இடங்களில் இருந்து இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வர்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஆயுத பூஜையான வியாழக்கிழமை, கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான மாணவ, மாணவியர் தாமரை மலர்களுடன் வந்து, தங்களது நோட்டு, புத்தகம் மற்றும் எழுதுபொருள்களை வைத்து வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து, விஜயதசமியை முன்னிட்டும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, நெல் மற்றும் அரிசி ஆகியவைகளில் எழுத்துகளை எழுத கற்றுக் கொடுத்தும், எழுத்துகளை அறிமுகம் செய்து வைத்தும் வழிபட்டனர். மேலும், சிலர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்த பிறகு, கோயிலுக்கு அழைத்து வந்து சன்னிதியில் அமர வைத்து, எழுத்துகளை எழுத வைத்தும், பாடங்களை படிக்க வைத்தும் சரஸ்வதியை வழிபட்டுச் சென்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இக்கோயிலில் வழிபட பக்தர்கள் வந்திருந்தனர்.