குற்றாலம் பேரருவியில் தண்ணீர்வரத்து குறைந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த தொடர் மழையின் காரணமாக பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர்வரத்து அதிகளவில் இருந்தது. இதையடுத்து, இரு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தண்ணீர்வரத்து குறைந்ததையடுத்து, பேரருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், பழைய குற்றாலம் அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் குறைவாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் நெரிசலின்றி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.