பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்இருப்பு கணிசமாக உள்ளதால் நிகழ் பிசான பருவத்தில் 60 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளதாக வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கார் பருவ அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது. தாமிரவருணி பாசன விவசாயிகள் பிசான பருவ சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட 16,837 ஹெக்டேரில் 13 ஆயிரம் ஹெக்டேர் வரை நெல் அறுவடை முடிந்துள்ளது.
பிசான பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து ஒருசில தினங்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 120 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 132.02 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 97.60 அடியாக உள்ளது. 2017இல் இதே நாளில் (நவ.11) பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100.80 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 114.63 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 79 அடியாக இருந்தது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பிரதான அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உள்ளதால் நிகழ் பிசான பருவத்தில் தாமிரவருணி பாசனத்தில் முழு அளவில் நெல் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 60 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்ய வாய்ப்புள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 679.28 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 457 கனஅடி, கடனாநதி அணைக்கு 70 கனஅடி, ராமநதி அணைக்கு 30 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணைக்கு 52 கனஅடி, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளுக்கு தலா 10 கனஅடி நீர்வரத்து உள்ளது.