தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும்: இந்திய வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை இது புயலாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது சென்னைக்கு 1140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. முதலில் வட தமிழகம் - ஆந்திரா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும் என்றும், தற்போது இது 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.