சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.
சேலம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள பட்டநாயக்கர்காடு பகுதியைச் சேர்ந்த கோபால் மனைவி கலா (55). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை கலாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல், மேட்டூர் அருகிலுள்ள கூனாண்டியூரைச் சேர்ந்த வளர்மதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து வளர்மதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார் எனத் தெரிகிறது.
தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் 12 பேர் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.