5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கருத்து கூற மறுத்துவிட்டார்.
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்று சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது. பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதை வைத்து எதையும் கணிக்க முடியாது. பாஜக, அதிமுகவுக்கு மாமனோ, மச்சானோ, பங்காளியோ கிடையாது. நாடாளுமன்ற தேர்லில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தலைமை முடிவு செய்யும்.
எதிர்க்கட்சிகள் என்னதான் வலுவான கூட்டணி அமைத்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும். 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக பல கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்தபோதும் மக்கள் அதிமுகவை தான் வெற்றிபெற செய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.