போடி குரங்கணியில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள நிபந்தனைகளுடன் வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
போடி வனத் துறையைச் சேர்ந்த குரங்கணி மலைப் பகுதியில், குரங்கணி முதல் டாப்-ஸ்டேஷன் வரை 16 கி.மீ. தொலைவு மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்காக தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் செல்ல வனத் துறை அனுமதி வழங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி சிலர் அனுமதியின்றி கொழுக்குமலை வனப் பகுதியிலிருந்து குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள புதிய விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி மாவட்ட வன அலுவலர் மீண்டும் மலையேற்றப் பயிற்சியை தொடக்கி வைக்க உள்ளதாக, வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.