நில மோசடி தொடர்பான வழக்கில், நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகினர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், நடிகர் வடிவேலு 34 சென்ட் நிலத்தை கடந்த 2002-ஆம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவரது வாரிசுகளிடம் இருந்து விலைக்கு வாங்கினார். இந்த நிலத்தை வாங்கித் தரும் அதிகாரம் பெற்ற முகவராக (பவர் ஏஜெண்ட்டாக) நடிகர் சிங்கமுத்து செயல்பட்டுள்ளார்.
இந்த நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வடிவேலு முயற்சித்தபோது, அந்த நிலத்தின் மீது பழனியப்பன் என்பவர் உரிமை கொண்டாடினார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப் பிரிவில் நடிகர் சிங்கமுத்து, நில உரிமையாளரின் வாரிசுகள் கங்கா, சாந்தகுமாரி உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணைக்கு நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அனைவரும் ஆஜராகவில்லை. இந்த நிலையில், உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து, வியாழக்கிழமை நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து, நில உரிமையாளரின் வாரிசு கங்கா உள்பட அனைவரும் நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு வியாழக்கிழமை ஆஜராகினர். விசாரணை சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கங்கா உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.