இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் பந்துவீச்சு, கிரிக்கெட் விதிமுறைகளுக்குப் புறம்பாக இருப்பதால் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தைத் தொடர்ந்து தனஞ்ஜெயாவின் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய ஐசிசி முடிவெடுத்தது. அதன்படி பிரிஸ்பேனில் உள்ள நேஷனல் கிரிக்கெட் செண்டரில் அவருடைய பந்துவீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
தனஞ்ஜெயா பந்துவீசும்போது பெரும்பாலான நேரங்களில் அவருடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர், சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பந்துவீச்சு முறையை மாற்றிக்கொண்ட பிறகு மறு ஆய்வுக்கு தனஞ்ஜெயா விண்ணப்பிக்கலாம். அதுவரை அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.