பாடல் 9
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம்,
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்,
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீயோ.
மூன்று உலகங்கள் தொடங்கி அனைத்துக்கும் முதல் தனி வித்தே, அங்கும், இங்கும் என எங்கும் முழுமையாக நிறைந்திருக்கிறவனே, வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் மூலப்பகுதியாகத் திகழுகின்றவனே, அனைத்துக்கும் தொடக்கமான, தனித்துவமானவனே, முதன்மையானவனாக, ஒப்பற்றவனாகச் சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த முடிவிலியே, இத்தகைய உன்னை, அனைத்துச் சிறப்புகளும் நிறைந்த முதல் தனிப்பொருளாகிய உன்னை, நான் என்றைக்கு வந்து கூடுவேனோ.