சர்வபூபால, கருட வாகனங்களில் பத்மாவதி தாயார் புறப்பாடு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளில் தாயார் சர்வபூபால, கருட வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்தார்.
சர்வபூபால, கருட வாகனங்களில் பத்மாவதி தாயார் புறப்பாடு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளில் தாயார் சர்வபூபால, கருட வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்தார்.
 இக்கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 6-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சர்வபூபால வாகனத்தில் கந்தர்வ சாப விமோசன கிருஷ்ணர் அலங்காரத்தில் தாயார் மாட வீதியில் வலம் வந்தார்.
 அதன்பின் தாயாருக்கு பால், தயிர், தேன், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், செஞ்சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பின் மாலை 4 முதல் 5 மணி வரை தங்கத் தேரில் தாயார் அனைத்து வித அலங்காரங்களுடன் மாட வீதியில் வலம் வந்தார். தங்கத் தேரை பெண்கள் அனைவரும் சேர்ந்து வடம் பிடித்து இழுத்தனர்.
 பின் மாலை 5.30 மணிக்கு 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. பின் இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் தாயார் அனைத்து வித அலங்காரங்களுடன் மாடவீதியில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின்போது தாயாரின் கருட வாகனத்தில் ஏழுமலையான் வலம் வருவது போல், தாயார் ஏழுமலையானின் கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். இதைக் காண பக்தர்கள் மாட வீதியில் திரண்டனர். வாகனச் சேவை அருகில் வரும் போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வாகனச் சேவைக்கு முன்னால் அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் வண்ண உடையணிந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
 ஏழுமலையான் திருவடிகளுடன் தாயார் பவனி
 திருச்சானூரில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளில் தாயார் ஏழுமலையானின் தங்கத் திருவடிகளுடன் மாடவீதியில் வலம் வந்தார்.
 திருச்சானூரில் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 6ஆம் நாள் இரவு தாயார் கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வருவது வழக்கம். அப்போது ஏழுமலையானின் பட்டத்தரசியான அவர், திருமலையில் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கத் திருவடிகளுடன் வலம் வருவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு தாயாருக்கு கருட வாகனச் சேவை நடைபெற்றதால் தாயாருக்கு அணிவிக்க திருமலையிலிருந்து ஏழுமலையானின் திருவடிகள் தருவிக்கப்பட்டன.
 திருமலையிலிருந்து அதை வாகனத்தில் கொண்டு வந்து அலிபிரி பகுதியில் இருந்து ஊர்வலமாக தேவஸ்தான அதிகாரிகள் திருச்சானூருக்கு கொண்டு வந்தனர். வழிநெடுகிலும் திருவடிகளுக்கு பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com