அடிக்கடி அபார்ஷனால் கலங்கி நிற்கிறீர்களா? கருக்காத்தம்மன் இருக்கக் கலங்க வேண்டாம்!

ஒருவர் எத்தனை விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச்செல்வம் இல்லையென்றால்..
அடிக்கடி அபார்ஷனால் கலங்கி நிற்கிறீர்களா? கருக்காத்தம்மன் இருக்கக் கலங்க வேண்டாம்!


ஒருவர் எத்தனை விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச்செல்வம் இல்லையென்றால் பிறவிப்பயன் கிட்டுவதில்லை. திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையே! அந்த கனவு நனவாகி பிள்ளைக் கனியமுது பிறக்கும்போது தாய் தந்தையர் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. வேத சாஸ்திரங்களும் புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன.

"ஸீக்ரமேவ ஸந்தான ப்ராப்தி ரஸ்து" என ஒரு திருமணமான பெண்ணை பெரியவர்கள் வாழ்த்தும்போது அவள் அளவிடமுடியாத மகிழ்ச்சி அடைவாள். நீண்ட நாட்களாகக் குழந்தை வேண்டிக் காத்திருக்கும் ஒரு பெண்ணை ஏதோ ஒரு நிகழ்ச்சியில் ஒரு குழந்தை அறியாமல் "அம்மா!" என அழைத்துவிட்டால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கும் ஏக்கத்தையும் சொல்லில் கூறமுடியாது.

ஒரு பெண் தாயாகும் பேறு மிக அற்புதமானது. ஆனால் தவிர்க்க முடியாத பல சூழ்நிலைகளினால் கர்ப்பமாகும் எல்லாப் பெண்களுக்கும் குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. அதற்கான காரணங்கள் பல இருந்தாலும், தாயின் உடல் நிலை, கருவின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு, கருப்பையில் ஏற்படும் உபாதைகள், வேண்டாத கர்ப்பம் என்பன முக்கியமானவையாகும்.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் அபார்ஷன் என்று சொல்லக்கூடிய கருக்கலைப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. கருச்சிதைவு பொதுவாக இரண்டு சூழ்நிலைகளில் நிகழ்கின்றது. ஒன்று தானாகவே ஒரு விபத்துபோல கருசிதைவு நிகழ்ந்துவிடுவது. மரபணு பிரச்னைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாடு, தாயின் கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், தாயின் உடம்பில் நோய்த் தாக்குதல், தாயின் உடம்பில் திடீர் கிருமித் தாக்குதல் ஆகிய காரணங்களால் அபார்ஷன் ஆகி விடுவதோடு அளவுக்கு அதிகமான டிராவல், அதிக எடை, பலம் குறைந்திருப்பது, அளவுக்கு அதிகமான டென்ஷன், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் கூடக் கர்ப்பம் தானாகவே கலையக் கூடிய வாய்ப்பு உள்ளது

மற்றொன்று நாமாக கருகலைப்பு செய்துவிடுவது. ஒரு பெண்ணுக்கு தானாகவே கர்ப்பம் கலைந்து விடுவதை மருத்துவ சிகிச்சைகளின் மூலம் தீர்த்து விடலாம். நாமாகவே சில சூழ்நிலை காரணமாக செய்வித்துக் கொள்வது அதாவது கணவன் மனைவி தமக்கு பிள்ளைகள் இப்போதைக்கு வேண்டாம் என்ற நிலையில், அல்லது பெற்ற பிள்ளைகள் போதும் இனியும் பிள்ளைகள் வேண்டாம் என்ற நிலையில், அல்லது கள்ளத் தொடர்பால் கர்ப்பமாகிவிட்ட சந்தர்ப்பத்தில் தாமாகவே முன்வந்து கருச்சிதைவு செய்வித்துக் கொள்கின்றார்கள். ஆனால், தானாகவே முன் வந்து கருவை கலைக்கச் செய்வது கொலை செய்வதற்குச் சமம்.

பொதுவாக பெண்கள் கருத்தரிக்கும் போது, முதல் மூன்று மாதத்திற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் சிசுவிற்கு உறுப்புகள் வளர ஆரம்பிப்பதால், மருத்துவர்கள் கர்ப்பிணிகளிடம் நன்கு ஓய்வு எடுப்பதுடன், கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். ஆனால் சிலருக்கு எவ்வளவு கவனமாக இருந்தாலும், கருச்சிதைவு ஏற்படும்.

கருத்தரிக்கும் ஆற்றல் உள்ள உயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தால் முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்டதூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிக டென்ஷன் போன்றவற்றால். காரமான உணவுகளை அதிகம் உண்பதால். கோழி, பப்பாளி, அன்னாசி, பலா போன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம் மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும்.

மரபணு பிரச்னைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாட்டை மரபணுச் சோதனையின் மூலம் கண்டுபிடித்து அதற்கேற்ற சிகிச்சையுடன் குழந்தைப் பேற்றை கவனமாக எதிர் நோக்க வேண்டும். அதனால்தான் இரத்த சொந்தத்தில் (அக்காவின் மகள், மாமனின் மகள், இரத்தம் சார்ந்த உறவினர்) திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

புத்திர பாவமும் புத்திர காரகனும்

ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் அல்லது ஐந்தாம் வீடு புத்திர ப்ராப்தியை குறிக்கும் இடமாகும். குழந்தை, பாட்டன் வம்சா வழி அத்துணையும், பாட்டிகள். பூர்வ புண்யம், மனம், எண்ணம், காதல், சந்தோஷம்,  அதிர்ஷ்டம், யோகம், போட்டி. இஷ்ட தெய்வம், சிற்றின்பம், மந்திர உச்சாடனம், உபாசனை (இஷ்ட தெய்வம்), கற்பழிப்பு, வழிபாடு, திருவிழாக் கோலங்கள், மன திருப்தி ஆகிய பாவ காரகங்களை தன்னகத்தே கொண்டது ஐந்தாம் பாவமாகும். எனவேதான் இதனைத் திரிகோண ஸ்தானங்களில் ஒன்றாகவும் லக்ஷமி ஸ்தானம் எனவும் கூறப்படுகிறது.

ஜாதகத்தில் கருச்சிதைவு ஏற்படுத்தும் கிரஹ நிலை

1. ஜோதிடத்தில் கருக்கலைவு ஏற்பட முக்கிய காரகராகும். கருக்கலைவு என்பது மாதவிலக்கினை போன்ற தன்மை கொண்டதால் ரத்தத்தின் காரகராகிய செவ்வாய் மற்றும் நீச சந்திரன் ஆகியவை கருக்கலைவிற்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. மேலும் பெண்களின் சூதக கோளாறுகளுக்கும் கால புருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் அதன் அதிபதியாகிய செவ்வாயே முக்கிய காரகர் ஆகின்றார்.

2. புத்திர பாவம், புத்திர பாவாதிபதி, புத்திர காரகர் குரு, பாக்கிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானதிபதி ஆகியவர்கள் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுப கிரகங்களுக்கு இடையே பாப கர்த்தாரி யோகம் பெற்று நிற்பது மற்றும் வக்கிரம் அடைந்து நிற்பது.

3. புத்திர காரகர் வக்கிரம் பெற்று அசுப சேர்க்கை பெற்று நிற்பது. இந்த அமைப்புள்ளவர்களுக்கு B6 எனும் விட்டமின் குறைபாட்டின் காரணமாக கருச்சிதைவு ஏற்படுகிறது. புத்திர பாக்கிய விட்டமின் எனச் செல்லமாக அழைக்கப்படும் B6-ன் காரகர் குரு பகவான் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஐந்தாம் பாவம்/பாவாதிபதி இரண்டிற்கும் மேற்பட்ட அசுப கிரஹ சேர்க்கை பெறுவது.

5. ஐந்தாம் பாவம் மற்றும் பாவாதிபதி சுப தொடர்பின்றி செவ்வாயின் பார்வை/சேர்க்கை மற்றும் பெற்றும் நிற்பது மற்றும் ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் மட்டும் நிற்பது.

6. கடகம் மற்றும் தனுர் ராசிகளுக்கு செவ்வாய் ஐந்தாம் பாவாதிபதியாகி வக்ரம்/நீசம் பெற்று நிற்பது.

7. ஐந்தாம் வீட்டிற்க்கு சனி, மாந்தி மற்றும் மாரக/பாதக/திதி சூன்ய அதிபதிகளின் தொடர்பு பெற்று நிற்பது.

8. சந்திரன் புத்திர ஸ்தானாதிபதியாகி ராகு/கேது தொடர்பு பெற்று நிற்பது அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதோடு கருப்பையில் சிறு சிறு கரும்புள்ளி போன்ற கொப்புளங்களை ஏற்படுத்தி கருத்தரிக்கும் தன்மையைக் கெடுத்துவிடுகிறது. இந்த அமைப்பு முக்கியமாக தாங்களாகவே கருக்கலைப்பு செய்பவர்களின் ஜாதகங்களில் காணலாம்.

9. பெண்களின் ஜாதகத்தில் சந்திரன் அசுப வீடுகளுக்கு அதிபதியாகி சனீஸ்வர பகவானைத் தொடர்பு கொண்டிருந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் மற்றும் கருச்சிதைவு ஏற்படும். சனைச்சர பகவானின் காரகம் பெற்ற வைட்டமின் K குறைபாடு மற்றும் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு சத்தின் குறைபாடு உள்ளவர்களுக்கும் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

கருச்சிதைவை தடுத்து புத்திர பாக்கியம் தரும் பரிகாரங்கள்

1. எந்த காரணத்தால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்களும் வணங்கவேண்டிய தெய்வம் அருள்மிகு கர்பரக்ஷாம்பிகைதான்! தஞ்சாவூர் அருகில் உள்ள பாபநாசம்என்ற ஊரில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருகருகாவூர். இங்கு அம்மன் பெயர் கர்பரக்ஷாம்பிகை. இறைவன் பெயர் முல்லைநாதர். அம்மன் பெயரில் உள்ளது போல கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காப்பதும், சுகப் பிரசவம் ஆவதற்கும் பெண்கள் இந்த அம்மனை மனம் உருகி வேண்டுவார்கள். அதுமட்டுமல்ல குழந்தை வரம் வேண்டியும் அம்மனை வேண்டுவதும் உண்டு.

2. சென்னை நுங்கம்பாக்கத்தை அடுத்த சேத்துப்பட்டில் உள்ள கருக்காத்தம்மன் கோயிலில் அம்மனுக்கு வேண்டிக்கொண்டு தொட்டில் கட்டுவது சிறந்த கண்கண்ட பலனாக அமைகிறது.

3. செவ்வாய் மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த திருச்சி சமயபுரம் மாரியம்மன், சென்னை திருவேற்காடு மாரியம்மன், முண்டக கண்ணியம்மன் போன்ற மாரியம்மன் திருக்கோயில்களுக்கு செவ்வாய் கிழமைகளில் சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வணங்கி வர அடிக்கடி கருக்கலைவது நின்று புத்திர பாக்கியம் ஏற்படும். அதிலும் கருமாரி அம்மனை வணங்கினால் கருச்சிதைவு ஏற்படாமல் காத்து நிற்பாள். 

4. சிதம்பரம் அருகே வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செவ்வாய்க்கிழமைகளில் சென்று அங்காரகனை வணங்கி வர கருக்கலைவு நின்று புத்திர பாக்கியம் ஏற்படும்.

5. புத்திர காரகனான குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வர சற்புத்திர பாக்கியம் ஏற்படும். மேலும் மருத்துவர் ஆலோசனையின் பேரில் குருவின் காரகத்துவம் கொண்ட B6 விட்டமினை தொடர்ந்து உட்கொண்டு வர கருக்கலைவு பிரச்னை தீரும்.


- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com