சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 7 வயதான இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதவரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் - கஜலட்சுமி தம்பதியின் 7 வயது இரட்டை குழந்தைகளான தக்சன், தீக்சா ஆகியோருக்கு கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கடும் காய்ச்சல் இருந்துள்ளது.
தொடர்து மருந்துகள் எடுத்து வந்தும், காய்ச்சல் குறையாததை அடுத்து 3 தினங்களுக்கு முன்பு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. பிபரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். அவர்களுக்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், இன்று காலை குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலன்ன்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளன், உயிரிழந்த குழந்தைகள் இருவரும் 5 நாள் காய்ச்சலுக்குப் பின்னரே, மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது அபாயக் கட்டத்தில் இருந்ததால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.