13. டெங்கு காய்ச்சல் 4 - ரத்தக்கசிவும் தட்டணுக்களும்!

ரத்தத்தில் தட்டணுக்கள் சிறு தட்டுகளாக மிதந்து சென்றாலும், ரத்தநாளம் பாதிக்கப்படும்போது, அதிலிருந்து ரத்தம் கசியாமல் தடுத்து, அதை அடைக்க உதவுகின்றன.

டெங்கு காய்ச்சல் காரணமாக மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய முக்கியப் பாதிப்புகள் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

எச்சரிக்கை நாள்கள்

டெங்கு காய்ச்சலின்போது முதல் மூன்று நாள்கள் காய்ச்சல் இருக்கும். பிறகு, 4 முதல் 6-வது நாளில் காய்ச்சல் குறையும். ஆனால், அப்போதுதான், மிக முக்கியமான ரத்தக்கசிவு, நீர் (பிளாஸ்மா) வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, காய்ச்சல் அதிகமாக இருப்பதைவிட, அதிலிருந்து காய்ச்சல் குறையும்போதுதான் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 7-வது நாளிலிருந்து ரத்தக்கசிவு குறையலாம். பிளாஸ்மா வெளியேற்றமும் குறைந்து 7 முதல் 9 நாள்களில் நோயாளி டெங்கு பாதிப்பில் இருந்து விடுபட வாய்ப்பு ஏற்படும்.

எனவே, ஒருவருக்குக் காய்ச்சல் தொடர்ந்து பத்து நாள்களுக்கு மேல் நீடித்துக்கொண்டே இருந்தால், அது டெங்குவாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

ரத்தக்கசிவு (Bleeding), பிளாஸ்மா நீர் வெளியேற்றம் ஏன்?

டெங்கு காய்ச்சலின்போது ஏன் ரத்தக்கசிவு ஏற்படுகிறது? பிளாஸ்மா நீர் ஏன் வெளியேறுகிறது என்பது குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.

ரத்தத்தில் டெங்கு வைரஸ் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதங்களை (Antibodies) உடல் உற்பத்தி செய்யும். இதன்காரணமாக, இவை வைரஸ் ஆன்டிஜீனோடு வினைபுரிந்து உடலைப் பாதுகாக்க முனையும். அப்போது எதிர்ப்பாற்றல் புரதத்துக்கு உதவும் காம்ப்ளிமெண்ட் (Complement) என்ற புரத சிறுபொருள்களும் அந்த வினையில் பங்கெடுக்கும். இந்த வினைகளால், தட்டணுவுடன் பல்வேறு எதிர்ப்பாற்றல் புரதங்கள், செல்வினை பொருள்கள் போன்றவை ரத்தநாளங்களில் படியும். இதன்காரணமாகத்தான் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள்

டெங்கு வைரஸ் பாதிப்பால், டி வகை வெள்ளையணு செல்கள் தூண்டப்படும். அவை ரத்தத்தில் பல்வேறு ரசாயன கடத்தும் வினைபொருள்களை (Chemical mediators. உதா - cytokines and chemokines) உருவாக்கும். இவற்றின் செயல்பாட்டினால் ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றில் இருந்து பிளாஸ்மா வெளியேறும். குறிப்பாக, ரத்தநாள தந்துகி குழாய்களிலிருந்து (capillary leakage) பிளாஸ்மா கசிவதால்தான் நுரையீரலைச் சுற்றியும், வயிற்றுப் பகுதியிலும் நீர் சேர்கிறது.

தட்டணுக்கள்

டெங்கு காய்ச்சலின்போது தட்டணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அது குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

ரத்தத்தில் காணப்படும் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்கள் போல, மற்றொரு முக்கியமான அணுக்கள்தான் இந்தத் தட்டணுக்கள். இவையும் பிற ரத்த அணுக்களைப்போல எலும்பு மஜ்ஜையிலிருந்துதான் உருவாகின்றன. ஒரு கியூபிக் மிமீ ரத்த்த்தில் சுமார் 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்கும். இந்தத் தட்டணுக்கள் சுமார் 8 முதல் 10 நாள்களுக்கு ரத்தத்தில் செயல்புரியும். அதன்பிறகு மண்ணீரலில் அவை அழிக்கப்படும்.

தட்டணுக்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், மிகை தட்டணு எண்ணிக்கை பாதிப்பு (Thrombocytosis) என்று அழைப்பார்கள்.

இவ்வகைப் பாதிப்பு, பரம்பரைக் காரணங்களாலோ, இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்தச்சோகை நோயினாலோ, புற்றுநோய்களாலோ, தொற்று அல்லது மண்ணீரலை அறுவைச் சிகிச்சை மூலம் வெளியேற்றிய காரணத்தாலோ ஏற்படலாம்.

தட்டணுக்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கும் குறைவாகச் சென்றால், அதை தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாடு (Thrombocytopenia) என்பார்கள்.

இத்தகைய எண்ணிக்கை குறைபாடுதான் டெங்கு காய்ச்சலில் ஏற்படுகிறது. அதே நேரத்தில், இதை மட்டும் வைத்து டெங்கு என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஒருவருக்குப் பல காரணங்களால் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையலாம்.

1. தட்டணுக்களின் உற்பத்தி குறைவது..

2. தட்டணுக்கள் உற்பத்தி சரியாக இருந்தாலும், அதிகமாக அதிக்கப்படுதல்..

3. மண்ணீரல் வீக்கம்

ஆகிய காரணங்களால், ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்.

தட்டணுக்களின் உற்பத்தி குறைபாடு

பெரும்பாலான வைரஸ் நோய்களினால், குறிப்பாக ப்ளாவி வைரஸ் பாதிப்புகளால் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்படுவதால், தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

சிலவகை மருந்துகளால் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டு அதன் காரணமாகவும் உற்பத்தி குறையலாம். அது, நுண்ணுயிர்க்கொல்லி மருந்தாகவோ (உதா - chloramphenicol) அல்லது புற்றுநோய்க்கான மருந்தாகவோ (chemotherapy) இருக்கலாம். கதிரியக்கச் சிகிச்சையாலும், ரத்தப் புற்றுநோய்களாலும், மது, வைட்டமின் குறைபாடுகளாலும் (வைட்டமின் பி12, போலிக் அமிலம்) தட்டணுக்கள் உற்பத்தி குறையலாம்.

தட்டணுக்கள் அதிகமாக அழிக்கப்படுதல்

உற்பத்தி முறையாக இருந்தாலும், சில மருந்துகளாலோ (வலிப்புக்கான மருந்துகள் - இதய நோய்க்கான மருந்துகள்) அல்லது உடல் எதிர்ப்பாற்றல் புரத பாதிப்பு நோய்களாலோ அதிகமாகச் சிதைக்கப்படுவதால் (உதா - ITP - Idiopathic Thrombocytopenic purpura) எண்ணிக்கை குறையலாம்.

மண்ணீரல் வீக்கம்

சிலருக்கு, கல்லீரல் பாதிப்பு நோய்களாலோ (cirrhosis) அல்லது புற்றுநோய்களாலோ (Leukemias / Lymphomas) மண்ணீரல் வீக்கம் ஏற்படும். அதாவது, பெரிதாகும். அப்போது அங்கு தட்டணுக்கள் தஞ்சம் புகுவதால், ரத்தத்தில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

தட்டணுக்களின் செயல்பாட்டை தடுக்கும் சில மருந்துகளும் இருக்கின்றன. உதா - Aspirin, Clopidogrel. இதுபோன்ற மருந்துகளை இதய நோயாளிகள் எடுத்துக்கொள்வார்கள். எனவே, டெங்கு காய்ச்சலின்போது இவற்றை இவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

தட்டணுக்களின் முக்கிய வேலை..

ரத்தத்தில் தட்டணுக்கள் சிறு தட்டுகளாக மிதந்து சென்றாலும், ரத்தநாளம் பாதிக்கப்படும்போது, அதிலிருந்து ரத்தம் கசியாமல் தடுத்து, அதை அடைக்க உதவுகின்றன. எதாவது காரணத்தால் ரத்தநாளம் பாதிக்கப்பட்டால் தட்டணுக்களுக்கு உடனே சிக்னல் வந்துவிடும். அவை உடனடியாகச் செயல்படக்கூடிய தட்டணுக்களாக (activated platelet) மாறி, தங்கள் உடலில் இருந்து நீட்சிகளை உருவாக்கும். இதன்மூலம், அவை ஒரு அக்டோபஸ் போல மாறிவிடும். இந்த அமைப்புதான், பாதிப்படைந்த ரத்தநாளத்தை அடைக்க உதவுகிறது. அதாவது, ரத்தம் உறைதலுக்கு உறுதுணையாக இருக்கிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com