ஐசாவால்: மிஸோரம் சட்டப்பேரவைக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 40 உறுப்பினர்களில் 36 பேர் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில், கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அங்குள்ள 40 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், முக்கிய மாநில கட்சியான மிஸோ தேசிய முன்னணி, 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் அக்கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. பாஜக ஒரு இடத்திலும், ஸோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் மிஸோரம் சட்டப்பேரவைக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 40 உறுப்பினர்களில் 36 பேர் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை ஆராய்ந்து, 'அஸோஷியேசன் ஆப் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்' என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:
2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 எம்.எல்.ஏக்களில் 30 பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் தற்போது 40 உறுப்பினர்களில் 36 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 15% அதிகமாகும்.
அதேபோல ஒட்டு மொத்த உறுப்பினர்களில் 2 பேர் (5%) தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவர் மீது கூட கிரிமினல் வழக்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.