நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக மாற்ற வேண்டும்; இதனை நோக்கமாக கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் பேசியது தொடர்பாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி முழுமையான கூட்டத் தொடர் என்பதால், அரசுக்கும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும்; அரசின் கொள்கைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் இக்கூட்டத் தொடரை மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம் நிறைவேறும் என்றும் அவர் கூறியதாக நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
இதனிடையே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவராவிட்டால், அவை நடவடிக்கைகளை முடக்குவோம் என்று சிவசேனை கூறியிருப்பது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, அயோத்தி விவகாரம் குறித்து மேற்கண்ட கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று பதிலளித்தார்.