மிஸோரம் மாநில முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான லால் தன்ஹாவ்லா தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார்.
மிஸோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணிக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
இந்த நிலையில், மிஸோரம் மாநிலத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்து வந்த லால் தன்ஹாவ்லா போட்டியிட்ட செர்ஜிப் தொகுதியில் ஸோரம் மக்கள் முன்னணிக் கட்சியின் வேட்பாளர் லால்துஹோமாவிடம் வெறும் 410 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதேப்போல, சாம்பாய் சௌத் தொகுதியில் 1,049 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
76 வயதாகும் லால் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மிஸோரம் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று லால் தன்ஹாவ்லா 5வது முறையாக முதல்வராக பதவியேற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மிஸோரம் தற்போது கைவிட்டுப் போயுள்ளது. இங்குள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மிஸோரமில் முக்கிய எதிர்க்கட்சியான மிஸோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.