தீபாவளி ஆரோக்கியம்

தீபாவளி என்பது குழந்தைகளுக்கு அதிக குதூகலம் தரும் பண்டிகை. இனிப்புகளும்
தீபாவளி ஆரோக்கியம்

தீபாவளி என்பது குழந்தைகளுக்கு அதிக குதூகலம் தரும் பண்டிகை. இனிப்புகளும் சுவையான பண்டங்களும் பட்டாசுகளும் புத்தாடையும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் மகிழ்ச்சியூட்டும் கொண்டாட்ட நாள். அதே சமயம் மிக மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் நடந்து கொண்டால் மட்டுமே அர்த்தமுள்ள கொண்டாட்டமாக அமையும்; இல்லையெனில் ஆரோக்கியப் பாதிப்புகளிலும் ஆபத்துக்களிலும் போய் முடிந்து விடும். அதனால் தான் தீபாவளியன்று தீயணைக்கும் படையினரும், நோயணைக்கும் [மருத்துவப்] படையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளது.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீபாவளி என்பது ஒரு கடின நாள்.அவர்களோடு மேலும் பலர் மூச்சுத் திணறல், கடுமையான இருமல், மற்றும் வேறு பல சுவாச உபாதைகளுடன் தீபாவளி நாளன்று மருத்துவமனைகளுக்கு வருவது வாடிக்கை. தீபாவளியன்று சுவாச நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவது 6-12 வயது குழந்தைகளே. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஆஸ்துமா போன்ற மோசமான சுவாச நோய்கள் தாக்குவதிலிருந்து தப்பிக்க சில வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. சுவாச ஒவ்வாமைக்குக் காரணமான உணவுப் பண்டம், தட்பவெப்ப மாற்றம், புகை, அதிக உடலியக்கம் போன்றவற்றைக் கவனமாகக் கருத்திற் கொண்டு தவிர்க்க வேண்டும்.

2. மாசு நிறைந்த சூழலில் இருக்கக் கூடாது.

3. மழை மற்றும் குளிர்காலமாக இருப்பதால் காலை நேர உடற்பயிற்சியை அல்லது நடைப்பயிற்சியை நன்கு சூரியோதயம் [ஓரளவு வெயில்] வந்த பின் [காலை 7 மணிக்குப் பின்] மேற்கொள்ள வேண்டும். மாலையெனில் வெயில் மறையும் முன் மேற்கொள்ள வேண்டும்.

4. பண்டிகை நாள் எனும் உற்சாகத்தில் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளை மறந்து விடக் கூடாது.

5. ஆஸ்துமா  நோயாளிகளுக்கு மென்மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் புகை, மது இரண்டையும் பண்டிகை எனற பெயரில் எக்காரணம் கொண்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் ஹோமியோபதியின் பங்கு;

ஹோமியோபதி மருத்துவம் என்பது மனிதனிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை முறியடிக்கக் கூடியது. ஆஸ்துமா போன்ற அவசர, திடீர் நோய் நிலைகளிலும் கூட ஹோமியோபதி சிறப்பாகப் பயன்படக் கூடிய ஆற்றல்மிக்க மருத்துவம் என்பது நிரூபணமான உண்மை. நோயின் பெயருக்கு அல்ல பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து பரிந்துரைகள் அமையும். எனவே ஒரே நோயில் பாதிக்கப்பட்டாலும் நபருக்கு நபர் மருந்து மாறுபடும்.ஆஸ்துமா துயரர்களுக்குப் பயன்படும் சில மருந்துகளைப் பார்ப்போம்;

1. ஆர்சனிக்கம் ஆல்பம் – பொதுவாக ஆஸ்துமாவிற்கு அதிகம் பயன்படும் தலைசிறந்த ஹோமியோ மருந்து. ஒவ்வாமையால் இழுப்பு ஓசையுடன் மூச்சுவிடச் சிரமப்படும் போதும், நள்ளிரல்  அதிகரித்து படுக்க முடியாமல் திணறும் போதும்,ஆர்சனிகம் தான் கண்கண்ட மருந்து.ஆர்சனிக்கம் நோயாளிகளுக்கும் வெந்நீர் குடிப்பது இதம் அளிக்கும்.

2. இபிகாக் – நாள்பட்ட ஆஸ்துமாவிற்கு ஏற்றது. குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அதிகம் பயன்படக் கூடியது. இரவுகளில் நெஞ்சுப்பகுதியில் ஒருவித வலியுடன் தலையில் சற்று உஷ்ணத்துடன் மூச்சுத் திணறல் ஏற்படும். மார்பில் கட்டிய சளியுடன், சற்று குமட்டலும் மூச்சுத் திணறலும் இருக்கும். தீவிர ஆஸ்துமா தாக்குதலில் அகோனைட் எனும் ஹோமியோ மருந்தையும் இபிகாக் மருந்தையும் மாற்றி மாற்றிக் கொடுத்து சில மருத்துவர்கள் துரிதமாக பலன் கண்டிருக்கிறார்கள்.

3. ஸ்பாஞ்சியா – குரைப்பது போல் இருமுதல், சிறிதளவே சளி வெளியேறும், இனிப்பு சாப்பிட்டால் இருமலும் மூச்சிரைப்பும் அதிகரிக்கும்.

4. கார்போ வெஜ் – வயிற்றுப் பகுதியில் அழுத்தத்துடனும், நெஞ்சுப் பகுதியில் இறுக்கத்துடனும் மூச்சுவிடச் சிரமம் ஏற்படும் போது சிறப்பாகப் கார்போ வெஜ் பயன்படும். ஜீரணப் பகுதிகளில் வாயு உப்பு சத்தால் திணறல் இருப்பின் கார்போ வெஜ் கைகொடுக்கும்.

5. நேட்ரம் சல்ப் -  ஈரமான தட்பவெப்பம், ஈரமான இடங்கள் மற்றும் மூடுபனி போன்ற சூழல்களில் உபாதை அதிகரிக்கும். வறண்ட குளிர்காற்று பாதிக்காது.

6. போதாஸ் – தூசி, புகை படிந்த காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படும் உபாதைக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

இனிப்புகளும் பட்டாசுகளும் பண்டிகை தினத்தை சுவையூட்டுவது போலவே எச்சரிக்கையாக இல்லாவிட்டால் துயரூட்டும் நிகழ்வாக மாறிவிடும். பண்டிகை கால தயாரிப்புகளான பெரும்பாலான இனிப்புகள் நெய் மற்றும் சீனி சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. சற்றே அளவிற்கு அதிகமாக உண்ணும் போது அஜீரணமோ, வயிற்றுப் போக்கோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. பால் பொருட்களில் செய்த இனிப்புகள் [மில்க் ஸ்வீட்ஸ்] தயாரிக்கப்பட்ட 3 - 4 நாட்களுக்குப் பின் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு  நல்லதல்ல.

நமது காது 90 டெசிபிள் அளவு சப்தம் மட்டுமே தாங்கக் கூடியது. ஆனால் சில வகை பட்டாசுகளால் எழும் இரைச்சலோ 95 டெசிபிள் முதல் 115 டெசிபிள் வரை உள்ளது. இதனால் செவிப்பறை கடுமையாகப் பாதிக்கப்படும்.

மேலும், தீ விபத்து இல்லாத தீபாவளியைக் காண்பது அரிதாகி விட்டது. பூவானம், வான வெடிகள், சிலவகை பெரிய பட்டாசுகள், மத்தாப்புகள், மெழுகு வர்த்திகள் போன்றவை களால் எதிர்பாராத விதத்தில் தீ விபத்து ஏற்பட்டு காயங்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டு வேதனை வடுக்களை உருவாக்கி விடுகின்றன. இத்தகைய தீவிபத்து ஏற்படும் நெருக்கடியான நேரத்தில் முகத்திலோ கண்களிலோ நெருப்புக் காயங்கள் ஏற்பட்டால் மிக விரைவாக உரிய மருத்து நிபுணர்களிடம் கொண்டு சென்று சிகிச்சை பெறுதல் அவசியம். காலதாமதத்தால் ஈடு செய்ய முடியாத இழப்பு உண்டாகி விடும்.

சக்திமிக்க வெடிகளை வெடிக்கும் போது பெரியவர்கள் குழந்தைகளுடன் இருக்க வேண்டும். வெடிகளை வேடிக்கைக்காக கைகளில் பிடித்துக் கொண்டே வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ராக்கெட் போன்ற வெடிகளை ஏவுவதற்கு குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. பற்றிய நிலையில் எந்தப் பட்டாசுகளுடனும் வேடிக்கை விளையாட்டு கூடாது. எளிதில் பற்றக் கூடிய ஆடைகள் அணிய வேண்டாம். வெறும் காலுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். காலம் செல்லச் செல்ல நாமும் நம் குழந்தைகளும் ஆரோக்கியத்தை, இயற்கையை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கக் கூடிய, பறவைகளையும் விலங்குகளையும் பாதுகாக்கக் கூடிய பசுமைத் தீபாவளியைக்       [GREEN DEEPAVALI] கொண்டாடக் கூடிய வண்ணம் மாற வேண்டியது அவசியம்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com