திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் 10ஆம் நாளான நேற்று அண்ணாமலையார் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 5.55 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தார். பிறகு மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான 'மகா தீபம்' ஏற்றப்பட்டது. உச்சியில் மகா தீபம் ஏற்றியதை கண்ட பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா கோஷ்ங்கள் எழுப்பி அண்ணாமலையாரை வழிபட்டனர்.