ஹெச்டிஎஃப்சி வங்கியின் லாபம் ரூ.5,005 கோடியாக அதிகரிப்பு
தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி இரண்டாவது காலாண்டில் ரூ.5,005.73 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து பங்குச் சந்தைக்கு அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த வருவாய் ரூ.28,215.2 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.23,276.2 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 21.2 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.4,151.03 கோடியிலிருந்து 20.6 சதவீதம் அதிகரித்து ரூ.5,005.73 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் ரூ.9,752.1 கோடியிலிருந்து 20.6 சதவீதம் உயர்ந்து ரூ.11,763.4 கோடியாக காணப்பட்டது.
செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 1.26 சதவீதத்திலிருந்து உயர்ந்து 1.33 சதவீதமாக இருந்தது. அதேசமயம், நிகர வாராக் கடன் விகிதம் 0.43 சதவீதத்திலிருந்து குறைந்து 0.40 சதவீதமாகியுள்ளது என ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.