இந்தியாவின் ஏற்றுமதி சென்ற நவம்பர் மாதத்தில் 2,650 கோடி டாலராக
அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
நாட்டின் ஏற்றுமதி நவம்பரில் 2,650 கோடி டாலராக (ரூ.1.85 லட்சம் கோடி) இருந்தது. கடந்தாண்டு இதே மாத கால அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மதிப்புடன் ஒப்பிடுகையில் இது வெறும் 0.80 சதவீதம் மட்டுமே அதிகம்.
அதேசமயம், இறக்குமதி 4.31 சதவீதம் உயர்ந்து 4,317 கோடி (ரூ.3.02 லட்சம் கோடி) டாலராக காணப்பட்டது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி கணிசமாக அதிகரித்ததையடுத்து வர்த்தக பற்றாக்குறை இடைவெளி 1,667 கோடி டாலராகி (ரூ,1.16 லட்சம் கோடி) உள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 15.6 சதவீதம் சரிவடைந்து 275 கோடி டாலராக இருந்தபோதிலும் வர்த்தக பற்றாக்குறையானது அதிகரிப்பைக் கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத கால அளவில் ஏற்றுமதி 11.58 சதவீதம் உயர்ந்து 21,752 கோடி டாலரை எட்டியுள்ளது. அதேசமயம், இறக்குமதி 14.71 சதவீதம் அதிகரித்து 34,564 கோடி டாலராகியுள்ளது. இந்த கால கட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை 12,813 கோடி டாலரைத் (ரூ.8.97 லட்சம் கோடி) தொட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் வர்த்தக பற்றாக்குறை 10,637 கோடி டாலராக காணப்பட்டது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.