பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.30,000 கோடி கூடுதல் மூலதனம்: மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி மூலதனத்தை வழங்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய நிதி அமைச்சகம் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதனம் அளிக்கும் திட்டத்தை அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக வங்கிகள் பேஸல் 3 விதிமுறைகளை நிறைவு செய்ய 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சந்தையிலிருந்து ரூ.58,000 கோடியை திரட்டிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத காரணத்தால் வங்கிகள் இதுவரையில் போதுமான நிதியை திரட்ட முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றன. இதனிடையே, பல வங்கிகளில் வாரக் கடன் அளவு நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் விஸ்வரூபமெடுத்துள்ளது. இதனால், வங்கிகள் ஈட்டும் லாபம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனை உணர்ந்து ரிசர்வ் வங்கி அண்மையில் மூலதன பாதுகாப்பு இருப்பு விதிமுறையை ஓராண்டுக்கு தள்ளி வைத்தது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால், பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.37,000 கோடி வரை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும், பேஸல் 3 விதிமுறையை நிறைவு செய்ய பொதுத் துறை வங்கிகளுக்கு இன்னும் ரூ.30,000 கோடி அளவிலான நிதி தேவைப்படுகிறது.
இதனை உணர்ந்து மத்திய அரசு, பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் கூடுதல் மூலதனம் வழங்க தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கான இறுதி முடிவை மத்திய அரசு இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.