வரும் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மயங்க் பாரீக் வியாழக்கிழமை கூறியதாவது:
அதிகரித்து வரும் ஈடுபொருள்கள் செலவினம், எரிபொருள்கள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வெளிப்புற பொருளாதார காரணிகளால் நிறுவனத்தின் செயல்பாடு அதிக செலவு பிடிக்கக்கூடியதாக மாறியுள்ளது. எனவே, தற்போதைய நிலையில் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து வாகனங்களின் விலையும் வரும் ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. மாடல் மற்றும் நகரங்களைப் பொருத்து ரூ.40,000 வரையில் இந்த விலை உயர்வு இருக்கும் என்றார் அவர்.
டாடா மோட்டார்ஸ் ரூ.2.36 லட்சம் மதிப்புள்ள சிறிய வகை நானோ கார் முதல் ரூ.17.97 லட்சம் விலை கொண்ட பிரிமீயம் வகை காரான ஹெக்ஸா வரை விற்பனை செய்து வருகிறது.
வரும் ஜனவரியில் புதிய வகை பிரிமீயம் ஹாரியர் சொகுசு காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்டு கார் விலை உயர்வு: ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஜனவரி முதல் கார்களின் விலையை 2.5 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநர் விநய் ரெய்னா கூறுகையில், "மூலப் பொருள்கள் விலை உயர்வு, அந்நியச் செலாவணியில் காணப்படும் ஏற்றத் தாழ்வு காரணமாக கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து ரக வாகனங்களின் விலையும் 2.5 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்த விலை உயர்வு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது' என்றார்.
மாருதி சுஸூகி, டொயோட்டா கிர்லோஸ்கர், பிஎம்டபிள்யூ, ரெனோ, இசுசூ ஏற்கெனவே விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு, நிஸான் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.