மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஆண்டு உற்சவம் டிசம்பர் 21- ஆம் தேதி தொடங்குகிறது.
சபரிமலை தலைமை பூஜாரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ தந்திரி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க ஆண்டு உற்சவ கொடியேற்றம் நடைபெறுகிறது.
21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மாலை 7 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் 22-ஆம் தேதி பாடகர் வீரமணி ராஜூ குழுவினரின் இசைக் கச்சேரியும், 26 -ஆம் தேதி கே.ஜே.ஜேசுதாஸ் கச்சேரியும் இடம் பெறுகின்றன.
டிசம்பர் 27-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பள்ளி வேட்டைநிகழ்ச்சியும், 28-ஆம் தேதி காட்டூர் வெம்பேடு கிராமத்தில் மதியம் 12-இல் இருந்து ஒரு மணி வரை ஐயப்பனுக்கு ஆராட்டு பூஜையும் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மகாலிங்கபுரம் விநாயகர் கோயிலில் இருந்து இரவு 7 மணிக்கு உற்சவர் ஐயப்பன் வெகு விமரிசையாக பெண்கள் விளக்கேந்தி வர மேளதாளத்துடன் ஊர்வலமாக 9 மணியளவில் கோயிலை வந்தடைகிறார் என்று கோயில் நிர்வாக அதிகாரி ஏ.சி.அனிஷ்குமார் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு 044- 28171197, 28172197, 28175197 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.